Monday, June 27, 2011

உன்னை பலவீனப்படுத்தும் எந்த ஒரு விஷயத்திடம் இருந்தும் விலகியே இரு. அது, அதிகபட்ச அன்பாக இருந்தாலும்..

உன்னை பலவீனப்படுத்தும் எந்த ஒரு விஷயத்திடம் இருந்தும் விலகியே இரு. அது, அதிகபட்ச அன்பாக இருந்தாலும்..

• பேசும்முன் கேளுங்கள்; எழுதும்முன் யோசியுங்கள்; செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.
• சிலவேளைகளில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
• யாரிடம் கற்கிறோமோ அவரே நம் ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
• நாம் மாறும்போது தானும் மாறி, நாம் தலையசைக்குபோது தானும் தலையசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை. அதற்கு நம் நிழலே போதும்.
• நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்.
• நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
• நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
• வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
• சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
• முழுமையானவன் இன்னும் பிறக்கவில்லை; இனியும் பிறக்க மாட்டான்.
• பரபரத்து ஓடுவதில் பயனில்லை; உரிய நேரத்தில் புறப்படுங்கள்.
• எல்லோரையும் நேசிப்பது சிரமம்தான்; ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.
• நல்லவர்களோடு நட்பாயிருங்கள்; நீங்களும் நல்லவனாகலாம்.
• காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை; ஆனால் கோபத்தின் காரணம் பெரும்பாலும் நல்லதாய் இருப்பதில்லை.
• விந்தையான சிலரைப் பார்க்கும்போது இவர்கள் ஏன் இப்படி? என்பதைவிட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்ளுங்கள்.
• யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்.
• ஆயிரம் முறை சிந்தியுங்கள்; ஒருமுறை முடிவெடுங்கள்.
• அச்சம்தான் நம்மை அச்சுறுத்துகிறது. அச்சத்தை அப்புறப் படுத்துவோம்.
• நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக எவருடனும் விவாதிப்பது சிறப்பாகும்.
• உண்மை புறப்பட ஆரம்பிக்கும்முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.
• உண்மை தனியாகச் செல்லும்; பொய்க்குத்தான் துணை வேண்டும்
• வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக இருக்கட்டும்.
• தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாறிப் போகிறான்.
• உலகம் ஒரு நாடக மேடை; ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.
• செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும்; அப்போதுதான் முன்னேற முடியும்.
• அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.
• வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்றவனாவான்.
• தோல்வி ஏற்படுவது, "அடுத்தச் செயலைக் கவனமாகச் செய்" என்பதற்கான எச்சரிக்கை.
• பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயல வேண்டும்.
• கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம்தான் கடினம்.
• ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.
• சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
• ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

Sunday, June 26, 2011

நல்லவர்களாக வாழுங்கள்

நல்லவர்களாக வாழுங்கள்

* இறையருளைப் பெறுவதற்கு ஆதாரம் அன்பு தான். மனதில் அன்பு ஊற்றெடுக்க வேண்டுமானால்,
எல்லா உயிர்களையும் நேசிப்பது ஒன்று தான் வழியாகும்.

* அன்னதானம் செய்பவர்களை கடவுளின் அம்சம் என்று சொல்ல வேண்டும்.
பசி புத்தியை தடுமாறச் செய்யும். பசி என்னும் தீயை அன்னத்தால் அணைக்க வேண்டும்.
அன்னமிடுபவர்கள் பெருங்கருணையாளர்கள் என்றால் மிகையில்லை.

* பெரியவர்களைக் கண்டால் பணிவுடன் நடந்து கொள்ளுங்கள்.
தவறு செய்தால் அதனைத் திருத்திக் கொள்ள முயலுங்கள். நற்குணங்களை பின்பற்றி நல்லவர்களாக வாழுங்கள்.

* ஆன்மிக உணர்வுடன் ஆண்டவனிடம் சரணடைந்தால் நம் மனம் தூய்மை பெறும்.
தூய மனம் பேரின்பத்தின் வாசலைத் திறந்துவிடும் சக்தி படைத்தது.

* மரணம் எப்போது வேண்டுமானாலும் நம்மைத் தேடி வரலாம்.
மனிதர்கள் நம் நிலையாமை தன்மையை உணர்ந்து கொள்ளத் தவறி விட்டனர்.
அதனால் பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை கொண்டு அலைகிறார்கள்.

* மனம் என்னும் கடிவாளத்தை உறுதியாகப் பிடித்தால் தான் நம் புலன்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

ஏழு விஷயங்கள்

ஏழு விஷயங்கள். . .

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செலவத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

1) சிந்தித்துப் பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாகப் பேசவேண்டும்.
4) மெதுவாகப் பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாகப் பேசவேண்டும்
7) பேசாதிருக்கப் பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்

1) மகிழ்ச்சியாக இருக்கப் பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்கக்கற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத் தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள்

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

Wednesday, June 22, 2011

தெய்வப் புலவரின் குறள்நெறி-3

தெய்வப் புலவரின் குறள்நெறி-3
தெய்வப் புலவரின் குறள்நெறி





குறள் : "அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது"


விளக்கம் :


எல்லாம் வல்ல இறைவனை இதற்கு முன்னால் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் என்று கூறிய வள்ளுவர் இங்கு அறத்தின் வழி நிற்கும் அந்தணர் என்கிறார். அந்தணன் என்போன் அறவோர் என்று கூறிய வள்ளுவர், இறைவனின் தன்மை அறத்தின் வழி நின்று பரிபாலிப்பது ஆகும். இறைவனை நேசிப்பதற்கு முன்பாக அறநெறியை நேசிக்க வேண்டும். அறம் இல்லாமல் ஆண்டவன நேசிப்பது கூட அதர்மமே ஆகும். அறநெறியில் நிற்காத யாருமே ஆண்டவனை அணுகமுடியாது.


மனித வாழ்வில் பாவக்கடலைக் கடப்பதற்கு பரமன் அருள் அவசியம் தேவை என வலியுறுத்தும் வள்ளுவர், இறைவன் தாள் சேர்ந்தவர்கள் மட்டுமே பாவக்கடலைக் கடந்து பக்குவம் அடைய முடியும் என்று குறள்நெறி சாதிக்கிறது. இது ஒரு ஆழ்ந்த ஆய்விற்குரிய செய்தி ஆகும். இறைவன் திருவடியைப் பற்றாத நல்ல நெறியாளர்கள் முடிவு, மோசமான பாவக்கடலில் சிக்கி பரிதவிக்கும் அனுபவத்தை ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் தெரியவரும். கடவுளை ஏற்காத மதங்கள், சிந்தனையாளர்கள் காலப்போக்கில் மனிதநேயமற்ற மூர்க்கர்களாக மாறிப்போன வரலாறு பல உண்டு. புத்த மதமும் சமண மதமும் கடவுளை ஏற்கவில்லை, அதனால் சமணர்கள் அதர்ம வழியில் சூழ்ச்சி செய்து சைவ நெறியாளர்களுக்கு இடையூறு தந்ததை ஞானசம்பந்தர் மற்றும் அப்பர் வரலாற்றில் அறியலாம். இன்று இலங்கையில் கூட புத்தமதம் தமிழர்களைக் கொல்லும் ஆயுதமாகத்தான் உள்ளது.


அச்சாணி இல்லாது சுழன்ற சக்கரம் ஆபத்து நிறைந்தது. அதுபோல அச்சாணியாகிய இறைவனின் திருவடியை மையமாக வைத்து சுழலும் மனிதன் பிறவாழி என்னும் பாவக்கடலில் இருந்து தப்பிதுவிடுவான். இறைவன் திருவடி ஞானம் என்னும் அச்சாணி இல்லாத சக்கரமாகிய நம் வாழ்க்கை சரியாக கழற்றி விடப்பட்டாலும் முடிவில் அது எங்கேயோ முட்டி மோதி அழிந்துபட்டுப் போகும். இதை உணர்ந்த வள்ளுவர் மனித இயக்கம் சரியாக சுழல வேண்டும் என்று கருதினால் முதலில் இறைவன் திருவடி என்கிற அச்சாணியைப் பிடித்துக் கொள்ள வேண்டும் ; அதன்பிறகு அறநெறியில் பயணிக்க வேண்டும்.


என்னிடம் நீதி உள்ளது நெறியான வாழ்வு உள்ளது , வாழ்ந்துவிடுவேன் என்று வாக்குறுதி தரலாம். ஆனால் முடிவு மோசமான அதர்மம் ஆகிவிடும். நாத்திக நெறி அறநெறிப்படி வாழ்வதை ஆமோதிக்கிறது, ஆனால் வாழ்ந்து காட்டும்போது தடுமாற்றம் உண்டாகி தடம் மாறி அவதிப்படுகிறது. இறைவன் திருவடியைப் பற்றுக்கோடாகக் கொண்டால் அன்றி யாருமே அறநெறியில் நிலைக்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டே "அரிது" என்ற வாசகத்தை வள்ளுவர் இணைத்துள்ளார். நெறியான கட்டுப்பாட்டை மீறுவது என்பது மனித மனதின் இயல்பான குணமாகும். அச்சாணியில் சுழலும் சக்கரம் அதைவிட்டு வெளியேறவே முயற்சி செய்யும், ஆனால் கடையாணி போட்டு சக்கரத்தை வெளியேறாதபடி தடுத்து விடுவார்கள். இந்தக் கடையாணி என்பதுதான் இறைவனின் திருவடி தரிசனமாகும். இது பயன்பாட்டில் அனுபவிக்காத மனம் கடையாணி இல்லாத சக்கரம் போல ஆகிவிடும்.


கடவுள் துணையோடு தொடங்கும் மனித வாழ்வு ஒருபக்கம்; கடவுளை ஏற்காது அறத்தை மட்டுமே ஏற்று தொடங்கும் மனித வாழ்வு ஒரு பக்கம். இதில் கடவுள் துணை இல்லாத மனித வாழ்வு தொடக்கத்தில் நெறியுடன் பயணம் செய்தாலும் முடிவில் நெறி தவறிய சகதியில் சிக்கி சண்டாளர் ஆகிவிடுவார்கள். இதற்கு சரியான காரணம் உள்ளது. இன்பத்தை அனுபவிக்கிற மனதிற்கு இறுதிப்புள்ளி வைக்கவே தெரியாது. இன்பத்தின் சுழற்சி வேகம் அதிகமாகிற போது பாவங்கள் சூழ்ந்து கொள்ளும். இனிப்பைச் சுவைக்கிற மனம் அது இல்லாத போது அடுத்தவனிடம் இருந்தால் கூட அபகரித்து இன்பம் காண மனித மனம் தயங்காது. இந்த குணமே உலகியல் பாவத்திற்கு காரணமாகும். இறைவனின் திருவடி ஞானம் வாய்க்கப் பெற்றவர்களும் இன்பத்தை சுவைப்பார்கள்; ஆனால் அந்த இன்பம் வரையறை செய்து நிறுத்தப்படும். ஒவ்வொரு இன்பத்தின் முடிவிலும் இறைஞானம் என்பது உதயமாகும்; முற்றுபுள்ளி என்பதும் அமைந்துவிடும்.


உலகம் தோன்றிய காலத்திலிருந்து கடவுளை மறந்து வாழ்வியலை புனிதமாக்க பலபேர் முயன்று முடிவாக தோல்வியே கண்டார்கள். கடவுள் உணர்வு இல்லாத இயக்கம் முடிவாக வன்முறையாளர்களாக மாறிப் போவதே வாடிக்கையான வரலாறு உணர்த்துகிறது. ஏனெனில் ஆசையை சீரமைப்பதும், இன்பத்தை வடிகட்டுவதும் இறைவனால் மட்டுமே முடிந்த செயலாக உள்ளது. ஒரு மிருகத்தின் வாழ்விலும் அறநெறி இருக்க வாய்ப்பே இல்லை, எதிர்பார்க்கவும் முடியாது. இன்பத்தை நுகர்பவன் சலிப்படையும் வரை அவனால் மீளவே முடியாது. சர்க்கரை கிண்ணத்தில் நுழைந்த எறும்பு தான் சாகும் வரை சுவைப்பதிலிருந்து மீண்டு வராது. அது போல கடவுள் உணர்வு இல்லாத மனமும் இந்த எறும்பைப் போலவே போராடும். துன்பத்தில் கூட புத்தனுக்கு ஞானம் பிறந்தது, இன்பத்தில் யாருக்குமே ஞானம் பிறக்காது. இன்பத்தில் ஞானம் பிறக்காதவரை மனிதன் இன்ப நெறியில் எத்தனை பாவமும் துணிந்து செய்வான். இதனை அறிந்து வள்ளுவர் எச்சரிப்பது இக்குறளின் துணிவு ஆகும்.


இறைவனின் திருவருள் இருந்தால் மட்டுமே இன்பத்தின் முடிவில் அதிர்ச்சி உண்டாக்கப்படும். கடையாணியை மோதும் சக்கரம் தனது இயல்பை மாற்றிக்கொள்ளும். எனவே அறநெறியில் பயணிக்க விரும்பும் ஆர்வலர்கள் முதலில் இறைவன் திருவடியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு நெறியான வாழ்வில் பயணிக்கும்போது பாவக்கடல் என்பது வராது. அப்படியே பாவக்கடல் குறுக்கிட்டாலும் இறையருளால் தப்பிக்கும் உபாயம் கிடைத்துவிடும். இறைவன் திருவடியைப் பற்றுக் கோடாக கொள்ளாத யாருமே பாவக்கடலில் சிக்கி பரிதவிப்பது உறுதி என்பதை எதிர்மறையாக வள்ளுவர் "திருவடி சேராதார்" பாவக்கடலை கடக்க முடியாது என்கிறார்.


இறைவன் திருவடி சேர்ந்து நெறியான வாழ்வில் பயணிப்போம்.

Tuesday, June 21, 2011

ஜீவகாந்தம்

ஜீவகாந்தம்
நமது உடலில் வலி, நோய், மரணம், எப்படி உண்டாகின்றன? ஏன் உண்டாகின்றன? இவற்றை நம்மால் தடுக்க முடியுமா? என்பது குறித்த அறிவு மிகவும் நுட்பமானது, அந்த அறிவை தெரிந்து கொள்வதற்கு உதவும் ஒரு தத்துவம்தான் ஜீவகாந்தம். இறையாற்றலின் சூழ்ந்தழுத்தத்தினால் பல நுண்துகள்கள் ஒன்றுகூடி பரமாணுக்களாகி, அவைகள் இறைவெளியில் சுழன்று கொண்டே இருக்கும்போது ஏற்படும் உரசலினால், பரமாணுக்களிலிருந்து இறைத் துகள்கள் அலைகளாக வெளியாகின்றன. அந்த அலைகள்தான் காந்தம், உடலுக்குள்ளாக உற்பத்தியாகிற காந்தத்தைச் ஜீவகாந்தம் என்றும், பிரபஞ்சத்தில் உற்பத்தியாகிற காந்தத்தை வான்காந்தம் என்றும் சொல்கிறோம்.
ஜீவகாந்த சக்தி நம் உடலுக்குள்ளாக இயங்குவதை நாமே உணர்ந்து கொள்ளலாம். கொஞ்சம் தளர்வாக உட்கார்ந்து கொள்ள வேண்டும், இரண்டு கைகளையும் நான்கு அங்குல இடைவெளியில் உள்ளங்கைகள் ஒன்றையொன்று நோக்குமாறு, வைத்துக்கொள்ள வேண்டும், உள்ளங்கைகளின் மேல் நினைவை வைக்க வேண்டும். முதலில் விரல்களில் விறு விறுவென்று உணர்வை உணரலாம். கொஞ்ச நேரத்தில் இரண்டு உள்ளங்கைகளுக்கும் இடையே விறுவிறுப்பான அலை ஓட்டத்தை உணரலாம். இதுதான் ஜீவகாந்த சக்தி, அப்படியே கொஞ்ச நேரத்திற்கு உள்ளங்கைகளை ஒன்றை ஒன்று தொடாமல் கொண்டு ஒன்றாகி விடுவதை காணலாம். இத்தகைய செயல்தான், காந்த இயக்கந்தான், ஒவ்வொரு செல்லிலும் நடைபெறுகிறது. ஒவ்வொரு செல்லிலும் இல்லாமல், மொத்த உடலில் ஜீவகாந்த இயக்கம் வராது. ஜீவகாந்தம் உடலில் ஓடிக் கொண்டிருக்கிறபோது ஒரு செல்லானது இன்னொரு செல்லோடு இணைந்து இயக்கிக் கொண்டிருக்கிற தொடர் நிகழ்ச்சியே உடலாக இயக்கத்தில் இருக்கிறது.
ஒரு காந்தக் கல்லை எடுத்துக் கொண்டு, அதன் அருகில் ஒரு ஊசியை கொண்டு வந்தால், காந்தக் கல்லானது ஊசியை பிடித்துக் கொள்ளும், காந்தக் கல்லை ஆட்டினாலும் அவைகள் அனைத்தும் காந்தக் கல்லால் பிடித்துக்கொள்ளப்படும், போதிய அளவு காந்த ஆற்றல் இருக்குமேயானால், நான்கு ஊசிகளும் தொங்குகின்றன, ஆட்டினால்கூட அவைகள் விழுவதில்லை, அவைகள் ஏன் விழுவதில்லை அவைகள் ஒன்றோடொன்று ஒட்டப்பட்டும் இருக்கவில்லை, கட்டியும் வைக்கப்படவில்லை, அப்படியானால் எப்படி அவைகள் விழாமல் நிற்கின்றன காந்த சக்தி அவைகளுக்கிடையே சுழன்று கொண்டேயிருப்பதால், அவைகள் ஒன்றையொன்று கவர்ந்து பிடித்துக் கொண்டிருக்கின்றன. அப்படியே தொடர்ந்து இயங்கிக் கொண்டும் இருக்கின்றன. காந்தக் கல்லை ஒட்டியுள்ள ஊசியை கையில் பிடித்துக் கொண்டு, காந்தக் கல்லை எடுத்து விட்டோமானால், எல்லா ஊசிகளும் பொலபொலவென்று உதிர்ந்து விடுவதை காணலாம். உடலில் உள்ள ஒவ்வொரு செல்லையும் ஜீவகாந்த ஆற்றல்தான் கவர்ந்து பிடித்துக் கொண்டிருக்கிறது. ஜீவகாந்த ஆற்றல்தான் உடல் நிலைத்திருப்பதற்கும் அது ஒரே தொகுப்பாக இயங்குவதற்கும் காரணமாக உள்ளது. உடலின் எடைக்கும், செல்களின் எண்ணிக்கைக்கும் தக்கவாறு உடலைப் பராமரிப்பதற்கு போதிய அளவு ஜீவகாந்த சக்தி வேண்டும்.
by Seethamani Krishnan

Sunday, June 19, 2011

மகாத்மா காந்தியின் சத்திய சோதனை -பிரம்மச்சரியம் -5

மகாத்மா காந்தியின் சத்திய சோதனை -பிரம்மச்சரியம் -5
ஆனால், அத்தகைய பிரம்மச்சரியத்தை மனிதப் பிரயத்தனத்தினால் மட்டும் அடைந்துவிடுவது முடியாத காரியம் என்பதை நான் இந்தியாவிற்கு வந்த பிறகே அறியலானேன். "அது வரையில், பழ ஆகாரத்தினால் மாத்திரமே, எல்லா ஆசைகளையும் போக்கிக் கொண்டுவிட முடியும்" என்ற மயக்கத்தில் இருந்து விட்டேன். அதற்குமேல் நான் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என்ற நம்பிக்கையில், எனக்குள் நானே பெருமையும் பட்டுக் கொண்டேன்.

என்னுடைய போராட்டங்களைப் பற்றிய அத்தியாயத்தை நான் முன் கூட்டி இங்கே விவரித்துவிடக் கூடாது. இதற்கு மத்தியில் ஒரு விஷயத்தைத் தெளிவாகக் கூறிவிடுகிறேன். கடவுளை அடைவது என்ற நோக்கத்துடன் பிரம்மச்சரியத்தை மேற்கொள்ளுகிறவர்களுக்குத் தங்களுடைய முயற்சியில் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறதோ அவ்வளவு நம்பிக்கை கடவுளிடம் இருக்குமாயின், அவர்கள் மனச் சோர்வு அடைய வேண்டியது இல்லை.

"இந்திரியங்களைத் தடுத்து வைப்பவனுக்கு விஷயானுபவங்கள் இல்லை; ஆனால் ஆசை மட்டும் இருக்கும். பரமாத்மாவைத் தரிசித்த பிறகு அவனுடைய ஆசையும் அழிகிறது."

ஆகவே, மோக்ஷத்தை நாடுகிறவனுக்கு ஆண்டவனுடைய திருநாமமும், ஆண்டவனுடைய பேரருளுமே கடைசி ஆதாரங்கள். இந்தியாவுக்குத் திரும்பிய பின்னரே இந்த உண்மை எனக்குப் புலனாயிற்று.
பிரம்மச்சாரி, பிரம்மச்சாரி அல்லாதவர் ஆகிய இருவரும் கட்புலனை உபயோகித்தே பார்க்கின்றனர். கடவுளின் மகிமையைக் காண்பதற்கே, பிரம்மச்சாரி கட்புலனைப் பயன்படுத்துகிறான். ஆனால், மற்றவனோ, தன்னைச் சுற்றிலும் உள்ள அற்பத்தனங்களைப் பார்க்கவே அதை உபயோகிக்கிறான். இருவரும் தங்கள்காதுகளை உபயோகிக்கின்றனர். இதில் ஒருவன், கடவுளின் புகழுரையைத் தவிர வேறு எதையும் செவிகொடுத்துக் கேட்பதில்லை. மற்றவனுக்கோ, ஆபாசப் பேச்சுக்களைக் கேட்பதே செவிக்கு விருந்தாக இருக்கிறது. இருவரும் இரவில் நீண்டநேரம் கண் விழிக்கின்றனர். ஒருவன், அந்நேரத்தைப் பிரார்த்தனையில் செலவிடுகிறான்; மற்றவனோ, வெறித்தனமான வீண் களியாட்டங்களில் பாழாக்குகிறான். அந்தராத்மாவுக்கு இருப்பிடமான உடலாகிய திருக்கோயிலுக்கே இருவரும் உணவளிக்கின்றனர். ஒருவன், ஆண்டவனின் திருக்கோயிலைப் பழுதுபடாமல் நல்ல நிலையில் வைத்திருப்பதற்கே அதைச் செய்கிறான். மற்றொருவனோ, கண்டவைகளையெல்லாம் அதில் போட்டு நிரப்பி, அந்தத் தெய்வீகப் பாத்திரத்தைத் துர்நாற்றம் அடிக்கும் சாக்கடை ஆக்கிவிடுகிறான். இவ்விதம் ஒருவருக்கொருவர் எவ்விதச் சம்பந்தமும் இன்றித் தொலைவிலேயே வாழ்கின்றனர். நாளாக ஆக இவ்விருவருக்கும் இடையே இருக்கும் தூரம் அதிகமாகுமே அன்றிக் குறையாது.

பிரம்மச்சரியம் என்பது மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் புலன்களை அடக்குவதேயாகும். மேற்கண்டதைப் போன்ற புலன் அடக்கத்தின் அவசியத்தை ஒவ்வொரு நாளும், மேலும் மேலும் நான் நன்றாக அறிந்துவருகிறேன். பிரம்மச்சரியத்திற்கான சாத்தியங்கள் எவ்விதம் எல்லையற்று இருக்கின்றனவோ, அதே போல் துறவுக்கும் எல்லையில்லாச் சாத்தியங்கள் உண்டு. அத்தகைய பிரம்மச்சரியத்தை ஒரு வரையறைக்கு உட்பட்ட முயற்சியினால் அடைந்துவிடுவது சாத்தியம் அல்ல. அநேகருக்கு அது வெறும் லட்சியமாக மாத்திரமே இருக்க முடியும். பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து ஒழுக விரும்புகிறவர், தம்மிடம் உள்ள குறைபாடுகளை எப்பொழுதும் உணர்ந்தவராக இருப்பார். தமது அடிமனத்தின் மூலை முடுக்குகளில் இருக்கும் ஆசைகளைத் தேடிப்பிடித்து, அவற்றைப் போக்கிக்கொள்ளுவதற்கு இடைவிடாது பாடுபட்டு வருவார். எண்ணங்கள் முற்றும் உறுதி பெற்றாலன்றிப் பூரணமான பிரம்மச்சரியம் சித்திக்காது. தானாகத் தோன்றும் எண்ணம், உள்ளத்தின் ஓர் இச்சையாகும். ஆகையால், எண்ணத்தை அடக்குவது என்பது மனத்தை அடக்குவதுதான் என்று ஆகிறது. மனத்தை அடக்குவதோ, காற்றை அடக்குவதைவிட இன்னும் அதிகக் கஷ்டமானது. என்றாலும், உள்ளத்தினுள் ஆண்டவன் இருந்து வருவதால் மனத்தை அடக்குவதும் சாத்தியமாகிறது. "அது கஷ்டமாக இருப்பதால் அது சாத்தியமானதே அல்ல" என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். அது மிக உயர்வான லட்சியம். ஆகவே, அதை அடைவதற்கு மிக அதிகமான முயற்சி தேவையாவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
பிரம்மச்சரியத்திற்கு உணவைத் தேர்ந்தெடுப்பதும், கட்டுப்படுத்துவதும் எவ்விதம் அவசியமோ, அதேபோல் அதன் புற உதவிக்கு, உண்ணாவிரதம் அவசியம். புலன் உணர்ச்சிகள் கட்டுக்கு அடங்காதவை. மேலும், கீழும், எல்லாப் பக்கங்களிலும் சரியாகத் தடுத்து வைத்தால்தான் அவற்றை அடக்கிவைக்க இயலும். பசி வந்திடப் பத்தும் பறந்து போம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆகையால், உண்ணா விரதம் இருப்பது புலன்களை அடக்குவதில் அதிக உதவியாக இருக்கும் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமே இல்லை. ஆனால், சிலர் விஷயத்தில் பட்டினி விரதம் பயன்படுவதில்லை. ஏனெனில், சாப்பிடாமல் இருப்பதனால் மாத்திரம் புலன் அடக்கம் கைகூடிவிடும் என்று இவர்கள் நினைத்து விடுகிறார்கள். இவர்கள் உடம்பைத்தான் பட்டினி போடுகிறார்களே அன்றி, உள்ளத்திற்கு விருந்து அளித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். "பட்டினிவிரதம் முடிந்ததும் என்ன என்ன ருசியான ஆகாரங்களைத் தின்பது, என்ன என்ன ருசியான பானங்களைப் பருகுவது?" என்பதைக் குறித்து எண்ணியவாறே இருக்கிறார்கள்.

இத்தகைய பட்டினி விரதங்கள், ருசியைக் கட்டுப்படுத்தவோ, காம இச்சையைக் கட்டுப்படுத்தவோ அவர்களுக்கு உதவுவதில்லை. பட்டினி கிடக்கும் உடலோடு, உள்ளமும் ஒத்து உழைத்தால்தான் பட்டினி விரதம் பயனுள்ளதாகும். அதாவது உடலுக்கு எவை மறுக்கப்படுகின்றனவோ அவைகளின் மீது பட்டினி விரதம் வெறுப்பை வளர்க்கவேண்டும். எல்லாப் புலன் உணர்ச்சிகளுக்கும் வேராக இருப்பது மனம். ஆகையால், பட்டினி விரதம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் பயன்தரும். பட்டினி விரதம் இருக்கும் ஒருவர், காமக்குரோத உணர்ச்சிகளுக்குத் தொடர்ந்து வயப்பட்டிருப்பவராகவே இருந்துவிடவும் கூடும். என்றாலும், பட்டினி விரதத்தை அனுசரிக்காமல் சிற்றின்ப இச்சையை அழித்து விடுவது சாத்தியமில்லை என்பது பொதுவான விதி என்று சொல்லலாம். அது பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பதற்கு அத்தியாவசியம் என்றும் சொல்லலாம். பிரம்மச்சரியத்தை அனுசரிக்க முற்படுகிறவர்களில், பலர் தவறிவிடுகின்றனர். இவர்கள் மற்றப் புலன்களை உபயோகிப்பதில் பிரம்மச்சாரிகளாக இல்லாமல் இருப்பது தான் இவர்கள் தோல்வியடைவதற்குக் காரணம். ஆகவே, இவர்களுடைய முயற்சி, தகிக்கும் வெயில் காலத்தில், குளிர் காலத்தின் நடுக்கும் குளிரை அனுபவிக்கச் செய்யும் முயற்சியைப் போன்றதாகிறது. பிரம்மச்சாரியின் வாழ்க்கைக்கும், பிரம்மச்சாரிகள் அல்லாத மற்றவர்கள் வாழ்க்கைக்கும் தெள்ளத் தெளிவான வேறுபாடு இருக்கவேண்டும். இவ்விரு பிரிவினரின் வாழ்க்கையும் ஒன்றுபோல் இருப்பதெல்லாம் வெளித்தோற்றத்தில் தான். ஆனால், வித்தியாசம் பட்டப் பகல்போல் வெட்ட வெளிச்சமாக இருந்தாக வேண்டும்.
"பிரம்மச்சரியத்தைப் பூரணமாக அனுசரிப்பதே பிரம்மத்தை அடைவதற்கு மார்க்கம்" என்ற அறிவு, சாத்திரங்களைப் படித்ததனால் ஏற்பட்டதன்று. அனுபவத்தினால் இந்த அறிவு எனக்கு நாளாவட்டத்தில் மெள்ள மெள்ள வளர்ந்தது. இது சம்பந்தமான சாத்திர நூல்களை என் வாழ்க்கையில் பின்னால்தான் நான் படித்தேன். உடல், மனம், ஆன்மா ஆகியவைகளைக் காப்பதிலேயே பிரம்மச்சரியம் இருக்கிறது. விரதத்தின் ஒவ்வொரு நாளும் என்னை இந்த அறிவுக்குப் பக்கத்தில் கொண்டுபோயிற்று. ஏனெனில், பிரம்மச்சரியம், ஒரு கடுமையான தவமுறையாக எனக்கு இல்லை. ஆறுதலையும், ஆனந்தத்தையும் எனக்கு அளிப்பதாகவே அது இருந்தது. ஒவ்வொரு நாளும் அதில் ஒரு புதிய அழகைக் கண்டேன்.

தினந்தோறும் ஆனந்தத்தை அதிகமாக்கும் விஷயமாகவே அது இருந்தாலும், அது எனக்கு எளிதாக இருந்துவிட்டது என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். எனக்கு ஐம்பத்தாறு வயது ஆகிவிட்ட பிறகும்கூட, அது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பதை அறிகிறேன். கத்தியின் முனைமீது நடப்பதைப் போன்றது அது என்பதை, ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் அதிகமாக உணருகிறேன். என்றைக்குமே விழிப்புடன் இருந்து வர வேண்டியது அவசியம் என்பதையும் காண்கிறேன்.

இந்த விரதத்தை அனுசரிப்பதில் அவசியமான முதல் காரியம், ருசி உணர்ச்சியை அடக்குவதாகும். ருசியை முற்றும் அடக்கி விடுவது, பிரம்மச்சரிய விரதத்தை அனுசரிப்பதை எளிதாக்கி விடுகிறது என்று கண்டேன். ஆகவே, சைவ உணவுக்காரன் என்ற வகையில் மாத்திரம் அன்றி பிரம்மச்சாரி என்ற வகையிலும் எனது உணவுப் பரிசோதனைகளை மேற்கொண்டும் நடத்தலானேன். இந்தச் சோதனைகளின் பலனாக, பிரம்மச்சாரியின் உணவு, ஓர் அளவுக்கு உட்பட்டதாகவும், எளிமையானதாகவும், மசாலை முதலியவைகள் கலக்காத தாகவும், சாத்தியமானால் சமைக்கப்படாததாகவும் இருக்க வேண்டும் என்பதைக் கண்டேன்.
பிரம்மச்சாரிக்கு ஏற்ற சிறந்த உணவு, பழங்களும் கொட்டைப் பருப்பு வகைகளுமே என்பதை ஆறு வருட அனுபவத்தில் அறிந்து கொண்டேன். இத்தகைய ஆகாரம் மாத்திரமே சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சிற்றின்ப இச்சை இல்லாத நிலையை நான் அனுபவித்ததைப்போல் அந்த உணவை மாற்றிவிட்ட பிறகு நான் அனுபவித்ததில்லை. தென்னாப்பிரிக்காவில் பழங்களையும் கொட்டைப் பருப்புகளையும் மாத்திரமே நான் புசித்து வந்தபோது, பிரம்மச்சரியத்திற்கு என் அளவில் எந்தவித முயற்சியும் தேவைப்படவில்லை. ஆனால் நான் பால் சாப்பிட ஆரம்பித்த பிறகு அதிக முயற்சியின் பேரிலேயே பிரம்மச்சரிய விரதத்தைக் காக்கவேண்டியிருந்தது. என் பழ ஆகாரத்திலிருந்து திரும்பவும் பால் சாப்பிட வேண்டிய நிலைமை எப்படி ஏற்பட்டது என்பதைக் குறித்து அதற்கு உரிய இடத்தில் பிறகு கவனிப்போம். பால் ஆகாரம் பிரம்மச்சரிய விரதத்தை அதிகக் கஷ்டமானதாக்குகிறது என்பதை மாத்திரம் இங்கே சொன்னால் போதுமானது. இதிலிருந்து "பிரம்மச்சாரிகளெல்லாம் பால் சாப்பிடுவதை விட்டுவிட வேண்டும்" என்ற முடிவுக்கு யாரும் வந்துவிட வேண்டாம். பலவகையான ஆகாரங்களும், பிரம்மச்சரியத்தை எவ்விதம் பாதிக்கின்றன என்பதை, அநேக சோதனைகளின் பிறகே முடிவு செய்ய முடியும்.
பாலைப் போல் தசையை நன்றாக வளர்க்கக்கூடியதும், எளிதில் ஜீரணிக்கக் கூடியதுமான பழம் எதையும் நான் இன்னும் கண்டுபிடித்து விடவில்லை. இது சம்பந்தமாக டாக்டர்கள், வைத்தியர்கள், ஹக்கீம்கள் முதலிய பலரைக் கேட்டும் என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆகையால், பால், காம உணர்ச்சியைத் தூண்டக் கூடியதுதான் என்றாலும், பாலை விட்டுவிடுமாறு இப்போதைக்கு யாருக்கும் நான் யோசனை கூறமாட்டேன்.
தீர விவாதித்து, ஆழ்ந்து சிந்தித்த பிறகே, 1906-ஆம் ஆண்டில் நான் பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டேன். இது சம்பந்தமாக எனக்கு இருந்த எண்ணங்களைக் குறித்து, அதுவரையில் என் மனைவியிடம் நான் எதுவும் கூறவில்லை. விரதத்தை மேற்கொண்ட சமயத்தில் மாத்திரமே அவளைக் கலந்து ஆலோசித்தேன். அவளுக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை. ஆனால், முடிவான தீர்மானத்திற்கு வருவதில் எனக்கு அதிகக் கஷ்டம் இருந்தது. அதற்கு வேண்டிய மனபலம் என்னிடம் இல்லை. எனது சிற்றின்ப இச்சையை அடக்குவது எப்படி? ஒருவன் தன்னுடைய மனைவியிடம் கூடச் சிற்றின்ப உறவைப் போக்கிக் கொண்டுவிடுவது என்பது விசித்திரமானதாகவே அப்பொழுது தோன்றிற்று. ஆனால், ஆண்டவனின் அருள் பலத்தில் பூரண நம்பிக்கை வைத்து, துணிந்து விரதத்தை மேற்கொண்டேன்.
அந்த விரதத்தை அனுசரித்து வந்திருக்கும் இருபது ஆண்டு காலத்தை நான் இப்பொழுது எண்ணிப் பார்க்கும்போது எனக்கு அளவற்ற ஆனந்தமும் ஆச்சரியமுமே உண்டாகின்றன. புலன் அடக்கத்தில் ஏறக்குறைய வெற்றிகரமாக அனுசரித்து வந்திருக்கும் பயிற்சி 1901-ஆம் ஆண்டிலிருந்தே நடந்து வருகிறது. ஆனால், விரதத்தை அனுசரித்த பிறகு எனக்கு ஏற்பட்ட சுதந்திரத்தையும் ஆனந்தத்தையும் 1906-ஆம் ஆண்டிற்கு முன்னால் நான் அனுபவித்ததில்லை. விரதம் கொள்ளுவதற்கு முன்னால் எந்தச் சமயத்திலும் ஆசைக்கு அடிமை ஆகிவிடக்கூடும் என்ற நிலையில் நான் இருந்தேன். ஆனால், இப்பொழுதோ எந்த ஆசையினின்றும் என்னைக் காக்கும் நிச்சயமான கேடயமாக விரதம் இருந்து வருகிறது.
பிரம்மச்சரியத்தின் அபார சக்தி, நாளுக்கு நாள் எனக்குப் புலனாகி வந்தது. நான் போனிக்ஸில் இருந்தபோது, இவ்விரதத்தை மேற்கொண்டேன். வைத்தியப் படைவேலை நீங்கியதும் போனிக்ஸு க்குப் போனேன். பிறகு ஜோகன்னஸ்பர்க்கிற்குத் திரும்பிவிட வேண்டியதாயிற்று. நான் அங்கே திரும்பிய ஒரு மாதத்திற்கெல்லாம் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு அடிகோலப்பட்டது. பிரம்மச்சரிய விரதம், எனக்குத் தெரியாமலே என்னைச் சத்தியாகிரகத்திற்குத் தயார் செய்து கொண்டிருந்தது போல் இருந்தது. சத்தியாக்கிரகம், முன்னாலேயே யோசித்துச் செய்யப்பட்ட திட்டம் அன்று நான் விரும்பாமலே அது தானாக வந்தது. ஆனால், என்னுடைய காரியங்களெல்லாம் அந்த லட்சியத்தில் கொண்டு போய் விட்டன என்பதைக் காண்கிறேன். ஜோகன்னஸ்பர்க்கில் அதிகமாக இருந்து வந்த வீட்டுச் செலவுகளையெல்லாம் குறைத்து விட்டேன். பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொள்வதற்கென்றே போனதைப் போல் போனிக்ஸு க்குச் சென்றேன்.

Sunday, June 12, 2011

மனதை அடக்குவதற்கு இரண்டு சாதனங்கள் உண்டு

மனதை அடக்குவதற்கு இரண்டு சாதனங்கள் உண்டு. வெளிப்படையாய் செய்வது பகிரங்கம்.

தனக்கு மட்டும் தெரியச் செய்வது அந்தரங்கம். தானதர்மங்கள் செய்வது, பூஜிப்பது, யாகம் நடத்துவது போன்ற செயல்கள் பகிரங்கமாக பலருக்குத் தெரியும்படி செய்வதாகும். அந்தரங்க சாதனம் என்பது தியானம் செய்வதாகும். தியானத்திற்கு துணைசெய்வது ஐந்து குணங்கள். அவை அகிம்சை, சத்தியம், தூய்மை, புலனடக்கம்,
திருடாமை ஆகியவை, இந்த ஐந்து நற்குணங்களால் மனதை அடக்கினால் தியானம் எளிதில் கைகூடும்.

அகிம்சை என்பது எல்லாவுயிர்களையும் அன்புமயமாகப் பாவிப்பதாகும். எண்ணம், சொல், செயல் இம்மூன்றாலும் உண்மைவழியில் நடப்பது சத்தியம். தூய்மை என்பது அகத்தூய்மை,
புறத்தூய்மை ஆகிய இரண்டுமாகும். புலனடக்கம் என்பது புலன் களை கட்டுப்பாட்டில் வைப்பதாகும். அதாவது கண் முதலிய ஐம்புலன்களையும் ஒழுக்கநெறியில் செலுத்துவதாகும் .



திருடாமை என்பது பிறர் பொருள் மீது ஆசைப்படாதிருப்பதாகும்.
இந்த குணங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம்.

இச்சாதனைகளைச் செய்வதற்கே நாம் சரீரம் என்னும் உடம்பை பெற்றிருக்கிறோம். இந்த ஐந்து ஒழுக்க நெறிகளை "சாமான்ய தர்மங்கள்' என்றே சாஸ்திரங்கள் சொல் கின்றன.
சாமான்யம் என்றால் மக்கள் அனைவருமே பின்பற்ற வேண்டியவை என்பது பொருள்.

--
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி கொடுங் கூற்றுக்கிரை எனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நானும் இங்கு வீழ்வேன்
என்று நினைத்தாயோ!**

- காந்தி

Saturday, June 11, 2011

பலாப் பழத்தை அதிகம் உண்ணாதீர்கள்!

பலாப் பழத்தை அதிகம் உண்ணாதீர்கள்!

உணவே மருந்து. ஆனால் அதுவே அளவிற்கு மிஞ்சினால் ஆபத்து. அளவோடு உண்டு ஆரோக்கியமாக வாழ சிறந்த வழிமுறைகள்:

* பலா பிஞ்சினை அதிகமாக உண்பதால் செரியாமை, வயிற்று வலி போன்றவை ஏற்படும். பலாப் பழத்தை அளவுடன்தான் சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால், வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் ஏற்படுத்தும்.

* பலாப் பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும். குடல்வால் அலற்சி அதாவது அப்பன்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப் பழத்தை சாப்பிடவே கூடாது.

* பலாக் கொட்டையை சுட்டு சாப்பிட்டால் அல்லு மாந்தம், மலச்சிக்கல், புளியேப்பம், கல் போன்று வயிறு கட்டிப்படல் ஏற்படும்.

* பலாப் பிஞ்சினை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால் சொறி, சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.

* சிறிது தண்ணீ­ரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டிகொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.

* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.



by Sylvia Velanganni

Thursday, June 9, 2011

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பறங்கிக்காய் மகிமை!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பறங்கிக்காய் மகிமை!

என் வயது 31. சிறுநீர்ப் பையில் புண்கள் இருப்பது ஸ்கேன் செய்து பார்த்தபோது தெரிந்தது. அதனால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறது. உடல் எடை 45 கிலோதான் உள்ளது. புண்கள் ஆறவும் உடல் எடை கூடவும் வழி என்ன? வை.ச.விமல் ஆனந்த், திருவாரூர்.

உணவின் மூலமாக ஏதேனும் விஷத் தொற்றோ, கிருமித் தொற்றோ ஏற்படுமானால், அதை வெளியேற்ற உடல் சிறுநீரகங்களைப் பயன்படுத்தி சிறுநீரைத் தாரையாகப் போகச் செய்கிறது. கல்லீரல் வழியாக இந்த விஷத் தொற்றை வெளியேற்ற, பித்த திரவங்களின் வழியாகச் சிறுநீரில் கலக்கும் போதும், சிறுநீர்ப் பையில் புண்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. அதனால் நீங்கள் உணவில் மாற்றங்களை ஏற்படுத்தி, மருந்துகளைச் சாப்பிட்டால், விரைவில் நிவாரணம் பெறலாம். வெளியே உணவுப் பண்டங்கள் சாப்பிடுவதை நிறுத்தி, வீட்டில் தயாரிக்கப்படும் தரமான உணவு வகைகளை மட்டுமே நீங்கள் சாப்பிடுவது நல்லது. இனிப்பும் குளிர்ச்சியும் நிறைந்த பறங்கிக்காய் சாப்பிட மிகவும் நல்லது. அது உடல் அழற்சி, பித்தப் பெருக்கு இவற்றைத் தடுக்கும். பழுத்த பறங்கிக் காயின் காம்பை உலர்த்தி தண்ணீரில் கரைத்துக் குடித்தால், சிறுநீரகங்களின் உள்ளே விஷப் பற்றுதலின் தாக்கம் குறையும். 4 - 8 விதையைச் சிறிது தண்ணீரில் கொதிக்கவிட்டு, வடிகட்டிக் குடிக்க, சிறுநீரக அழற்சி குறையும். நீர்ச்சுருக்கை அகற்றும் பனங்கற்கண்டை அந்த விதைக் கஷாயத்துடன் சேர்த்துச் சாப்பிட, விரைவில் குணம் கிடைக்கும். பறங்கிக் காயைப் போல, பீர்க்கங்காய், புடலங்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கள் உள் அழற்சியைப் போக்கி, சிறுநீரை அதிகமாக வெளியேற்றும். இனிப்பும் குளிர்ச்சியும் நிறைந்த கறிகாய்களையும் உணவில் அதிகம் சேர்ப்பது நலமே. நன்னாரி வேர்த்தூளைக் குடிநீரில் 5-10 கிராம் போட்டு அது ஊறியதும் சாப்பிட, சிறுநீரை அதிகமாக வெளியேறச் செய்து ரத்தத்தைத் சுத்தப்படுத்தும். உடற்காங்கை குறைக்கும். நன்னாரி பானகம் கோடையில் ஏற்றது. வால்மிளகைப் பசுவின் பாலில் ஊற வைத்து, அரைத்துக் கலக்கிச் சாப்பிட்டு வர சிறுநீர் எரிச்சல், சிறுநீருடன் சீழ் விழுதல், நீர்த்துவார வேக்காளம் குறையும். முலாம் பழச் சாற்றோடு சர்க்கரை சேர்த்துப் பருகினால் சிறுநீர் எரிச்சலுக்கு நல்லது. தண்டுக் கீரை மலத்தை இளக்கி கொதிப்பை அடக்கும். வயிற்றுக் கடுப்பு, ரத்தபேதி, நீர்ச்சுருக்கு இவற்றுக்கு நல்லது. அதுபோல சிறுகீரையும் தண்டுக் கீரையைச் சார்ந்ததே. கண் புகைச்சல், நீர்ச்சுருக்கு, சிறுநீர்ப்பைப் புண், வீக்கம் இவற்றைப் போக்கும். உடல் அழகைத் தரும்., பசலைக் கீரை நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு, ருசியின்மை, வாந்தி முதலியவற்றுக்கு நல்லது. பருப்புக் கீரை இனிப்பும் புளிப்பும் உள்ளது. கொதிப்பை அடக்கும். சிறுநீரைப் பெருக்கும். குடல் வறட்சியை நீக்கி மலத்தை இளக்கும். உள் புண்ணை ஆற்றும். இவற்றை நீங்கள் பயன்படுத்துவது நல்லது. இனிப்பும் குளிர்ச்சியும் நிறைந்த சவ்வரிசிப் பாயாசம் சாப்பிடவும். புஷ்டி தரும் இனிய உணவாகிய சவ்வரிசியைக் கஞ்சி, கூழ், வடாம் என்று பல வகைகளில் நீங்கள் பயன்படுத்தினால் நீர்த்தாரை அழற்சியை நீக்கி, உடலையும் புஷ்டிப்படுத்தும். ஆயுர்வேத மருந்துகளில் சந்தனாஸவம் 15 மிலி, சாரிபாத்யாஸவம் 15 மிலி கலந்து காலை இரவு உணவுக்குப் பிறகு சுமார் 21 -28 நாட்கள் சாப்பிடலாம். ************* பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)செல் : 9444441771
மருத்துவம்

Wednesday, June 8, 2011

உள்ளத்தின் சோதனை

உள்ளத்தின் சோதனை
மனதின் நிலையே வாழ்வின் வளம் ஆகும். நிலத்தில் ஊன்றும் வித்து எதுவென்றாலும் நீர் தெளித்து வந்தால் அது முளைத்து பயிராகி அதனதன் தன்மைக்கேற்ற பயன் தருகின்றது. அதுபோன்றே உள்ளத்தில் ஊன்றும் எண்ணங்களும் நாளுக்கு நாள் உறுதிபெற்று வாழ்வின் பயனாக விளைந்துவிடும்.
ஆகவே நமது வாழ்வு நலமுற வேண்டுமெனில் எந்த விதமான கெட்ட எண்ணத்தையும் நமது உள்ளத்தில் உன்றவோ வளரவிடவோ கூடாது.

1. கோபம்,
2. வஞ்சம்,
3. பொறாமை,
4. வெறுப்புணர்ச்சி,
5. பேராசை,
6. ஒழுக்கம் மீறிய காம நோக்கம்,
7. தற்பெருமை,
8. அவமதிப்பு,
9. அவசியமற்ற பயம்,
10. அதிகாரபோதை

என்ற பத்து வரையும் நமது உள்ளத்தில் நிலைபெற வொட்டாமல் அவ்வப்போது ஆராய்ந்து களைந்து கொண்டே இருக்க வேண்டும். இவை வளர்ந்தால் நல்லெண்ணம் வருவதற்கோ, நிலைப்பதற்கோ, இடமில்லாத துன்பம் தரும் காடாக நமது உள்ளம் மாறிவிடும். உடல் காந்த சக்தியை பாழாக்கிக்கொண்டே இருக்கும் ஓட்டைகளாக இக்கெட்ட குணங்கள் மாறிவிடும்.

காலையிலும் மாலையிலும் 10 நிமிடநேரம் அமைதியாக உட்கார்ந்து உள்ளத்தை சோதனையிடும் பணியைத் தொடங்குங்கள். 30 நாட்களில் கிடைக்கும் வெற்றியை அனுபவத்தில் கண்டு மகிழுங்கள்.

வாழ்க valamudan

by Vethathiriyam for World Peace

Monday, June 6, 2011

உடல் நலம் காக்கப் பெற வேண்டுமாயின் அடக்கப்படக் கூடாத 14 அம்சங்கள்

உடல் நலம் காக்கப் பெற வேண்டுமாயின் அடக்கப்படக் கூடாத 14 அம்சங்கள்
1 . தூக்கம்
2 . தாகம்
3 . சிறு நீர்
4 . தும்மல்
5 . இருமல்
6 . வாந்தி
7 . பசி
8 . கொட்டாவி
9 . மலம்
10 . ஏப்பம்
11 . தது
12 . கண்ணீர்
13 . அபான வாவு
14 . மூச்சு

Saturday, June 4, 2011

குடும்பம் அமைதி பெற

குடும்பம் அமைதி பெற
பொது:
1. குடும்ப உறுப்பினர்களிடம் உடல்நலம் மனவளம் உறுதியான நட்பு இவை நிலவினால் அமைதி நீடிக்கும்.

2. ஒவ்வொருவரும் தத்ம் கடமையை உணர்ந்து ஆற்றியும், வரவுக்குள் செலவை நிலைநிறுத்தியும் செல்வ வளத்தை காக்கலாம்.

3. தேவை அளவு, தன்மை, காலம் ஆகியவற்றில் கருத்து முரண் ஏற்பட்டால் வெளிப்படையாகவேப் பேசி அன்போடு தீர்த்துக் கொள்ளலாம்.

4. பிறர் குற்றத்தைப் பெரிது படுத்தாமையும் பொறுத்தலும் மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும்.

5. பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் அவை சொல்லப்படாததுபோல் பாவித்து ஒதுக்கிவிட்டால் அமைதி பிழைக்கும்.


தம்பதிகளுக்கு:

6. எவ்வகையிலும் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் தெரியாமல் வாழ்தல் நல்லதல்ல.

7. ஒருவரை ஒருவர் துல்லியமாக புரிந்துகொண்டால் எக்காரணத்தாலும் அன்புப் பிடிப்பு தளராது.

8. ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் சம்பாதிப்பது செலவழிப்பது சேமிப்பது பிணக்கையே கொண்டு வரும்.

9. குடும்பத் தலைவருக்கு தன்முனைப்பு சிறிதும் வேண்டாம்.

10. நிர்வாகத்திற்கு ஏற்றது அறிவுதான் (உணர்ச்சியல்ல).

11. கூட்டாளியின் சக்திக் குறைவை சகித்துக்கொண்டால் சிக்கல் எழாது.

12. வாழ்க்கைத்துணை ஒத்துக்கொள்ளும் நாள்வரை எவ்வளவு அவசியமானாலும் எதையும் தள்ளி வைத்தலே நல்லது.

13. ஒருவர் மற்றவரின் மனப்போக்கு, உடல் தேவைகளை மதித்தால் பாலுறவு வேட்பில் நிறைவு பெறலாம்.

உணர்வாளர்களுக்கு:

14. தனக்குத் கிடைத்த வாழ்க்கைத் துணை பற்றி தம்பதிகளில் யாருக்கும் குறையிருக்கத் தேவையில்லை (காரணம் நம் உயிராற்றலே தான் தேர்ந்தெடுத்தது).


15. சிறிய சிறிய சச்சரவுகளுக்கெல்லாம் இடம் கொடுத்தால் பிறவிக்கடல் நீந்தும் நமது நோக்கத்திற்குத் தேவையான சக்தி விரயமாகிவிடும்.

by Vethathiriyam for World Peace