Sunday, January 29, 2012

நீண்ட நாள் வாழ, சேவை செய்யுங்கள்

நீண்ட நாள் வாழ, சேவை செய்யுங்கள்

சுயநலமற்ற தன்னார்வத்தொண்டில் ஈடுபடுபவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.

தன்னார்வத் தொண்டு செய்வது என்பதே ஒரு பொதுச்சேவைதானே, இதில் சுயநலமென்ன? பொதுநலமென்ன? என்று கேட்கத்தோன்றலாம். ஆனால் சுயநலமாக இல்லாமல் பொதுநல எண்ணத்துடன் தன்னார்வத் தொண்டில் ஈடுபடுவதே உயர்ந்ததாக இருக்க முடியும் என்பதுதான் நிதர்சனம். இந்த கருத்தைத்தான் ஆரோக்கியத்துடன்கூடிய நீண்டகால வாழ்க்கையுடன் தொடர்புபடுத்துகிறது அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று.

தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடாதவர்களுடன் ஒப்பிடுகையில், குறிப்பாக `பொதுநல' நோக்குடன் தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடுவோர் மட்டுமே நீண்ட நாட்கள் வாழக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்கிறது அமெரிக்க உளவியலாளர் சாரா கோன்ராத் தலைமையிலான ஆய்வு.

அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரின் சுமார் 10,317 உயர்கல்வி மாணவர்களை கடந்த 1957-ம்ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை நடைபெற்ற (Wisconsin Longitudinal Study நஞ்ஞிக்ஷட் என்னும்) ஆய்வின் தகவல்களை பரிசோதித்தனர். இதில் கலந்துகொண்ட மொத்த மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள், அவர் களுக்கு கடந்த 2008-ம் ஆண்டில் வயது சராசரியாக 69.12 வருடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வின் முடிவுகள் மூலம், `பொதுநல' நோக்குடன் அல்லது இரக்க குணத்துடன் தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடுவோர் மட்டுமே நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள் என்றும், மாறாக சுயநல காரணங்களுக்காக அல்லது சுய திருப்திக்காக ஈடுபடுவோரும், தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடாதவர்களும் ஒரே ஆயுட்காலம் கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக கடந்த 2004-ம் ஆண்டில், இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்கள் தாங்கள் கடந்த 10 ஆண்டுகளில் தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபட்டோமா இல்லையா, தொடர்ந்து ஈடுபட்டோமா போன்ற கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். மேலும்,தன் னார்வத் தொண்டுகளில் ஈடுபட்டதற்கு காரணங்களாக சுமார் 10 கேள்விகளுக்கு விடையளிப்பதன் மூலம் தெரியப்படுத்த சொல்லி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

ஆய்வில் கலந்துகொண்டவர்களிடம் மேற்குறிப்பிட்ட 10 கேள்விகளை கேட்பதற்கு, சுமார் 12 வருடங்களுக்கு முன்பே, அதாவது 1992ம் ஆண்டிலேயே, அவர்களுடைய உடல் ஆரோக்கியம், சமுதாய அந்தஸ்து (பொருளாதார நிலை), திருமண நிலை மற்றும் புகைப்பிடித்தல், உடல் எடை அளவீடு, மதுப்பழக்கம் போன்ற ஆரோக்கிய கேட்டுக்கான காரணிகள் என பல்வேறு விவரங்கள் குறித்துக்கொள்ளப்பட்டது. அதன்பின்னரே, இந்த கேள்விகளுக்கு பதில் அளித்தவர்கள் எத்தனை பேர் கடந்த 2008-ம் ஆண்டில் உயிரோடு இருந்தார்கள் என்று நிர்ணயித்தார்கள் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வில் கலந்துகொண்ட 2,384 தன்னார்வலர்கள் அல்லாதவர்களில் 4.3 விழுக்காட்டினரும், சுயநல காரணங்களுக்காக தன்னார்வத்தொண்டில் ஈடுபட்டவர்களில் 4 விழுக்காட்டினரும், 10 கேள்விகளுக்கு பதிலலளித்த பின்னர் 4 ஆண்டுகளில் (2008ல்) நோய்வாய்ப்பட்டு இறந்துபோயினர். மாறாக, பொதுநல நோக்குடன் தன்னார்வத்தொண்டில் ஈடுபட்டவர் களில் வெறும் 1.6 விழுக்காட்டினர் மட்டுமே கடந்த 2008ல் இறந்து போயினர்என்கிறது இந்த ஆய்வு!

அட, ஆச்சரியமாக இருக்கிறதே! ஆமாம், இவர்களுக்குள் இருக்கும் இந்த ஆயுட்கால வித்தியாசத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?

பிறரின் நலத்தை முன்னிலைப்படுத்தி தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடுவோருக்கு தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடுவதால் ஏற்படும் உளைச்சல்கள் அல்லது பிரச்சினைகளான `நேரவிரயம்' மற்றும் `சம்பளமின்மை' போன்றவை குறித்த பாதிப்போ, கவலையோ முற்றிலும் போவதுகூட இந்த ஆயுட்கால வித்தியாசத்திற்கு காரணமாக இருக்கக்கூடும் என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட சாரா கோன்ராத்!

ஆக, `சுயநலத்துடன் மேற்கொள்ளப்படும் தன்னார்வத் தொண்டுகளால் நமக்கு பயனிருக்கிறது என்று நாம் நினைக்கிறோம், ஆனால் நிதர்சனம் முற்றிலும் நேர் மறையானது' என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது இந்த ஆய்வு!

ஒரு வேளை இப்படியெல்லாம் நடக்கும் என்பது நன்றாக தெரிந்ததால்தான் `முல்லைக்குக் கூட தன் தேரைக் கொடுத்திருப்பாரோ' மன்னன் பாரி?
thanks vayal

Saturday, January 21, 2012

மஞ்சள் காமாலை என்பது நோயா?

மஞ்சள் காமாலை என்பது நோயா?

காமாலை என்றழைக்கப்படும், மஞ்சள் காமாலையை, பரிசோதனைகள் ஏதும் செய்யாமல், கண்கள் மஞ்சள் நிறமாவதை வைத்து, முன்னோர்கள் கண்டறிந்தனர். வீட்டு வைத்தியம் செய்து வந்தனர். எண்ணெய், உப்பு அற்ற உணவு அல்லது புரோட்டீன் சத்து நிறைந்த உணவுடன், ஆட்டுப்பால், கீழா நெல்லி இலை விழுது கொடுத்து வைத்தியம் செய்தனர். “டாக்டரிடம் போகாதீர்கள். ஆங்கில மருத்துவத்தில், மஞ்சள் காமாலைக்கு சிகிச்சையே கிடையாது’ என்றும் கூறினர். ஆனால், அலோபதியில் சிகிச்சை உண்டு. “ஜானே’ என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து “ஜாண்டிஸ்’ என்ற ஆங்கில வார்த்தை உருவானது. 19ம் நூற்றாண்டில் தான், “ஜானே’ என்ற வார்த்தையே உருவானது. எல்லா காமாலையும், மஞ்சள் காமாலை அல்ல என்பதை அப்போதே மருத்துவர்கள் உணர்ந்திருந்தனர். ஒவ்வொருவரின் உடல் நிலைக்கேற்ப, பாதிப்புக்கு ஏற்ப, இந்த அறிகுறியின் தன்மை மாறுபடும். சிலர் முற்றிலும் குணமடைந்தனர்; சிலருக்கு சில காலம் பிடித்தது; சிலர் மரணமடைந்தனர்.
எல்லாம் விதிப்பயன் என்று சொல்வதை விட, ஏன் இப்படி ஏற்பட்டது என்று ஆராயும்போது தான், எல்லா அறிகுறிகளும் ஒரே வகையான நோயை சார்ந்தது அல்ல என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். காமாலை என்பது நோயே அல்ல; உடலில் ஏற்படும் நோய்க்கான அறிகுறியே. ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள், அல்ட்ராசவுண்டு உட்பட ஸ்கேன்கள் ஆகியவற்றின் மூலம் காமாலை அறிகுறியை துல்லியமாக கண்டறியலாம். மேலும், மஞ்சளாக இருப்பவர்கள் அனைவருமே, காமாலை அறிகுறியுடன் இருப்பவர்கள் என்று சொல்ல முடியாது. “புளோரசன்ட்’ விளக்கின் கீழ் நிற்கும் அனைவரின் தோலும் மஞ்சளாகத் தான் தெரியும். கேரட், பப்பாளி ஆகியவை சாப்பிடும்போதும், தோலின் மேல் கெரோட்டின் படிந்து, சற்று மஞ்சளாகக் காட்சி அளிக்கும். கண் விழியின் மேல் படலத்தின் கீழ் கொழுப்பு படிந்தாலும், தூசியாலும், கண்கள் சில நேரங்களில் மஞ்சளாகத் தெரியும். இதுவும் காமாலை அல்ல. “பிலுருபின்’ என்ற நிறமி, கண் வெளிப்படலம் மற்றும் தோலில் படிந்து கறை ஏற்படும்போது தான், அதை காமாலை என்று கூற முடியும். சிறுநீர், வியர்வையிலும் சில நேரங்களில் மஞ்சள் நிறம் வெளிப்படும். ரத்தத்தில் உள்ள பழைய சிவப்பு அணுக்கள் மண்ணீரல் மற்றும் கல்லீரலில் சிதைக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றன. அப்போது, “பிலுருபின்’ என்ற நிறமியும் வெளிப்படும். ரத்தத்தில் இந்த நிறமியின் அளவு மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்தால், கண்ணில் மஞ்சள் நிறம் தென்படும். சிவப்பு அணுக்கள், அளவுக்கு அதிகமாக சிதைந்து போகும்போது, அதை வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்தி, வெளியேற்றும் பணியை மேற்கொள்ளும் கல்லீரல், அதிக வேலைப்பளுவால் திணறும். அப்போது மஞ்சள் காமாலை ஏற்படும். பாரம்பரியமான சில நோய்கள், மலேரியா, சில மருந்து வகைகளை உட்கொள்வது ஆகியவற்றால் இது போன்று மஞ்சள் நிற அறிகுறிகள் ஏற்படலாம். பச்சை வேர்க்கடலையை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் கூட, சிலருக்கு மஞ்சள் காமாலை ஏற்படும். அதில் உள்ள “அப்ளோடாக்சின்’ என்ற உட்கூறு, கல்லீரல் செல்களுக்கு விஷமாக அமைந்து விடும். சில நேரங்களில், கல்லீரலே பாதிப்படைந்து, அளவுக்கு அதிகமான பிலுருபினை வெளியேற்ற முடியாமல் போகும். பாரம்பரிய காரணங்களால் இது போன்று ஏற்படலாம். எனினும், மிக குறைந்த அளவில் தான் பாதிப்பு ஏற்படும்; உயிருக்கு ஆபத்து இல்லை.
பிறந்த குழந்தைகளுக்கு, கல்லீரல் செல்கள் போதுமான அளவு வளர்ச்சி அடையாமல் போனாலோ, தாய்க்கும் -குழந்தைக்கும் ரத்தப் பிரிவு ஒத்துப் போகாமல் இருத்தல் ஆகியவற்றால், குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏற்படலாம். எனினும், இது முற்றிலும் குணப்படுத்தக் கூடியதே.
ஹெப்பாடைட்டிஸ் ஏ, பி, சி, டி, இ, ஹெர்பஸ், லெப்டோஸ்பைரோசிஸ், சைட்டோமெகாலோ வைரஸ் ஆகியவை கல்லீரல் செல்களை பாதித்து, மஞ்சள் காமாலையை உருவாக்குகின்றன. மது குடித்தால் கல்லீரல் விஷமாகி விடும். தொடர்ந்து பல ஆண்டுகள் மது அருந்தினால், கல்லீரல் பாதிப்படைந்து மஞ்சள் காமாலை ஏற்படும். கல்லீரல் நாளங்களில் கல், புற்றுநோய், அடைப்பு உருவாகி தடை ஏற்படும்போது, பிலுருபின் வெளியேறுவதில் சிக்கல் உருவாகும். இதனால், போதுமான அளவிலான வெளியேற்றம் கூட தடைபட்டு விடும். இதனால் பிரச்னை உருவாகும். அனைத்து விதமான காமாலைக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை முறையை பின்பற்ற முடியாது. ரத்தம் மற்றும் சிறுநீரை, அறிவியல் ரீதியான பரிசோதனை செய்து, எந்த மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்த பிறகே, சிகிச்சை துவங்க வேண்டும். இளைஞர்களுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலையில் 80 சதவீதம் ஹெப்பாடைட்டிஸ் ஏ வைரசால் உருவாகிறது. இதற்கு சிகிச்சை தேவைப்படாது. சில வாரங்களில் தானாகவே குணமாகி விடும். ஆனால், இதை வைத்து அற்புதம், அதிசய சிகிச்சை என விளம்பரப்படுத்துகின்றனர். ஹெப்பாடைட்டிஸ் ஏ மற்றும் பி ஆகிய நோய்கள் முற்றிலும் குணமாக்கக் கூடியவை. குழந்தை பிறந்த ஓராண்டு நிறைவதற்குள், ஹெப்பாடைட்டிஸ் பி தடுப்பூசி, மூன்று முறை போடப்படுகிறது. இரண்டு ஆண்டு நிறைவடைந்ததும், ஹெப்பாடைட்டிஸ் ஏ வகை நோய்க்கான தடுப்பூசி இரண்டு முறை போடப்படுகிறது. குழந்தை பருவத்தில் ஊசி போட தவறினால், வளர்ந்த பிறகு போட்டுக் கொள்ளலாம். வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றின் மூலம் ஹெப்பாடைட்டிஸ் பி மற்றும் சி நோய்களை குணப்படுத்தி விடலாம். ஹெர்பஸ் தொற்று, லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் சைட்டோமெகாலோ வைரஸ் நோய்களுக்கு குறிப்பிட்ட மருந்துகள் உள்ளன. நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்தால், சில வகையான மஞ்சள் காமாலையை குணப்படுத்தி விடலாம். மது அருந்தாமலிருந்து, நோயை குணப்படுத்தும் மருந்துகளை சரியாக சாப்பிடவில்லை எனில், மஞ்சள் காமாலை பாதிப்பு தீவிரமாகி விடும். அறுவை சிகிச்சை மூலம் சரியாகக் கூடிய நோய்களை, ஸ்கேன், லேப்பராஸ்கோபி செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். பரிசோதனையின் அடிப்படையில் சரியான சிகிச்சை அளிப்பது இந்நோய்க்கு அவசியம். அறியாமை, பயம் காரணமாக சிகிச்சையில் தாமதமானால் மரணம் கூட ஏற்படலாம். துரதிருஷ்டவசமாக பெரும்பாலானோர், சுய பரிசோதனை செய்து, போலி டாக்டர்களிடம் சென்று “இயற்கை மருத்துவம்’ செய்து கொள்கின்றனர். “ஹிட் ஆர் மிஸ்’ என்பது விளையாட்டுத்துறைக்கு வேண்டுமானால் பொருந்தலாம்; மனித வாழ்க்கையை பாதிக்கும் வகையிலான மருத்துவ முறைக்கு பொருந்தாது!
THANKS : VAYAL

Wednesday, January 11, 2012

உடல் நலம் தொடர்பான தகவல்கள்

இதயநலம் காக்கும் உடற்பயிற்சிகள்

உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் முக்கியமான விஷயங்களைப் பட்டியலிடுங்கள் என்றால் அந்தப் பட்டியலின் முதன்மையான இடத்தில் உடற்பயிற்சி என்பது இருக்கும். உடற்பயிற்சியின் அவசியம் பற்றி காலம்காலமாக நாம் பேசி வந்தாலும் அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் முழுமையாக யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அப்படி உணர்ந்திருந்தால், இதய நோயானிகளின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகரித்திருக்காது.
பல நோய்களில் இருந்து நம்மைக் காக்கும் பாதுகாப்பு அரண்களாக உடற்பயிற்சிகள் அமைகின்றன. இதய நோய்களால் பாதிக்கப்படாமல் தப்பிப்பதற்கும் உடற்பயிற்சிகள் எத்தகைய நன்மைகளை அளிக்கின்றன என்பதை இந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்க்கலாம்.
இதயம் வலுவான தசைகளால் ஆன விசை அமைப்பு என்பதை நீங்கள் அறிவீர்கள். இதயம் நன்கு செயல்பட வேண்டும் என்றால், தமனிகளின் மூலமாக ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ரத்தம் கிடைக்க வேண்டும். அப்போதுதான் தசைகள் வலுவாக இருந்து இதயத்தை நன்றாக இயங்க வைக்க முடியும். இதயத்தில் உள்ள தசைகளை வலுவாக்க ஒருவரின் வயது உடல் அமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப உடற்பயிற்சிறைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்த உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
என்னென்ன உடற்பயிற்சிகளைச் செய்யலாம் என்பதைப் பார்க்கும் முன்பு உடலுக்கு எந்த வகையில் அவை உதவுகின்றன என்பதைப் பார்த்தவிடலாம்.
உடற்பயிற்சியின் பயன்கள்.
இதயத்தில் இருந்து ரத்தம், ரத்தக் குழாய்களின் மூலமாக நமது உடலில் உள்ள உறுப்புகளுக்குப் போய்ச் சேர்கிறது. எதிர்பாராத காரணங்களால் அதாவது, ரத்தக் குழாய்களில் தடை இருந்தாலோ அல்லது அவை பாதிக்கப்பட்டிருந்தாலோ ரத்தம் சரிவர உறுப்புகளுக்குப் போய்ச் சேராது. இந்த இக்கட்டான நிலையை ஈடுகட்டும் வகையில் முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபடாமல் இருக்க மாற்று ரத்தக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரத்தக் குழாய்களை இணை ரத்தக்குழாய்கள் (Collateral Circulation) என்று சொல்வார்கள்.
அதெல்லாம் சரிதான். உடற்பயிற்சிக்கும் இந்த இணை ரத்தக் குழாய்களுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இருக்கிறது.
இந்த இணை ரத்தக் குழாய்கள் இதயம் உருவாகும்போதே உருவாகிவிடுகின்றன. ஆனால் முக்கியமான வேலைகளை முதன்மை ரத்தக் குழாய்களே முழுநேரமும் செய்துவிடுவதால் இணை ரத்தக் குழாய்கள் செயலற்றுத்தான் காணப்படும். அவசர காலத்தில் தானே நமது சேவை தேவை என்ற அலட்சியத்தில் இவை அளவில் சுருங்கியும், வளைந்தும், நெளிந்தும் காணப்படும். அந்த நிலையில் திடீரென முதன்மை ரத்தக் குழாய்கள் செயலற்றுப் போகும்போது இவை விழிப்படைந்து வேலை செய்ய சற்று நேரம் பிடிக்கும்.
ஆனால் இளமைப் பருவத்தில் இருந்து நாம் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன் மூலம், இந்தத இணை ரத்தக் குழாய்களை நன்கு இயக்கி அவற்றை எப்போதுமே தயார் நிலையில் வைத்திருக்கலாம். அதன் மூலமாக திடீரென இதயத்தின் முதன்மை ரத்தக் குழாய்கள் அடைபடும்போது, இந்த இணை ரத்தக்குழாய்கள் விரைவாகச் செயல்பட்டு, மாரடைப்பு போன்ற சிக்கலான பிரச்சனைகளால் மரண ஆபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
நீங்கள் தொடர்ச்சியாகத் தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்புக்கான வாய்ப்பையும் பெருமளவு குறைத்துவிடலாம். மாரடைப்புக்கு அடிப்படை காரணம் இதயத் தமனிகள் முழுமையாக அடைபட்டு இதயத்தசைகள் சுருங்கி, இதயம் இயங்கத் தேவையான உயிர்வளி சத்துகள் போன்றவை கிடைக்காததுதான். அன்றாட உடற்பயிற்சிகள், இதயத் தசைகளின் சுருங்கும் ஆற்றலை அதிகமாக்குகின்றன. அதோடு உடற்பயிற்சி செய்யும் போது அதிக அழுத்தத்துடன் ரத்தம் ரத்தக் குழாய்கள் வழியே செல்கிறது.
இதயத் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை அதிக அழுத்தத்துடன் வரும் ரத்தமானது ஓரளவுக்கு அகற்றுகிறது. இதன் மூலமாக மாரடைப்புக்கான வாய்ப்பு குறைக்கப்படுகிறது. அன்றாட உடற்பயிற்சியின் மூலமாக இதயத் தமனி நோய்களையும், மாரடைப்பையும் கணிசமான அளவு தடுக்க முடியும்.
உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் சரிவர இயங்க வேண்டும் என்றால் தேவையான உயிர்வளி, சத்துகள் போன்றவை தொடர்ந்து கிடைக்க வேண்டும். ரத்தத்தின் மூலமாகவே இவை செல்களைப் போய்ச் சேருகின்றன. அன்றாடம் குறிப்பிட்ட கால அளவில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் இதயத்தின் செயல்திறனை அதிகமாக்குவதோடு, உடலில் உள்ள பல்வேறு ரத்தக் குழார்களை விரிவடையச் செய்கின்றன. மேலும் ரத்தக் குழாய்களில் ரத்தம் தங்கு தடையில்லாமல் ஓடவும் துணைபுரிகின்றன.
இதயத்துக்கு ஏற்ற உடற்பயிற்சிகள்
உடலின் உயிர்வளித் தேவையைப் பெருக்கும் உடற்பயிற்சிகளை உயிர் வளி பெருக்கும் உடற்பயிற்சிகள் (Aerobic Exercise) என்று சொல்வதுண்டு.
இத்தகைய உடற்பயிற்சிகளின் மூலமாக உடலில் உள்ள உறுப்புகளுக்குத் தேவையான உயிர்வளியைப் பன்மடங்காக பெருக்க முடியும். இதனால் இதயமானது தனக்குத் தேவையான ரத்தத்தையும், சத்துகளையும் பெற முடியும்.
பொதுவாக இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை நடைப்பயிற்சி (Walking), மெல்லோட்டம் (Jogging), சைக்கிள் பயிற்சி (Cycling), நீச்சல் பயிற்சி (Swimming) என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் உங்கள் வயது, உல் அமைப்பு, ஓய்வு நேரம், உடல் ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.
நடைப்பயிற்சி
நடைப்பயிற்சியில் Trekking, Leiú§re Walking, Race Walking, Power Malking என பலவகைகள் உள்ளன. இவற்றில் உங்களுக்கு எந்த வகைப் பயிற்சி ஒத்துவருகிறதோ அதைத் தொடர்ச்சியாகச் செய்து வர வேண்டும்.
மற்ற வகையான உடற்கயிற்சிகளுடன் ஒப்பிடும்போது நடைபயிற்சி மிகவும் எளிமையானதாக இருக்கிறது. இந்தப் பயிற்சியை எந்த இடத்திலும் மிகவும் எளிமையாக மேற்கொள்ள முடியும். இப்பயிற்சியை மேற்கொள்ள ஒரு ஜோடி காலணிகள் இருந்தால் போதும்.
எளிமையான உடற்பயிற்சியாக இருந்தாலும் இதனால் கிடைக்கும் நன்மைகள் பல. அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்வது, உடலின் எடையைக் குறைக்க துணை புரிவதோடு தெளிவாகச் சிந்திக்கவும் உதவுகிறது. மேலும் இதயத் தசைகளை வலுவாக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
நடைப்பயிற்சியில் ஏற்படும் முழுப்பயனைப் பெற வேண்டும் என்றால், தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அன்றாடம் நடக்கும் தூரத்தைப் படிப்படியாக உடலின் ஆற்றலுக்கு ஏற்றவாறு அதிகரிக்க வேண்டும். நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது நடக்கும் இதயத் துடிப்பின் அளவானது நிமிடத்துக்கு 100&க்கு மேல் இருக்க வேண்டும்.
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அன்றாடம் 10,000 காலடிகள் (Sˆepv) நடக்க வேண்டும் என இதய மருத்துவர்கள் சொல்கின்றனர். ஆனால் நாம் அதிகபட்சம் 3,000 காலடிகளுக்கு மேல் நடப்பதில்லை. பத்தடிகூட நடக்காமல் இருப்பதைவிட 3,000 காலடிகள் நடப்பது நல்லதுதானே.
நடைப்பயிற்சியின் அவசியத்தை இவ்வளவு விரிவாக எடுத்துச் சொல்லியும் சிலர், நடப்பதற்கு எனக்கு நேரமும், வாய்ப்பும் கிடைக்கவே இல்லை என புலம்புவார்கள். அவர்களுக்கு சில அறிவுரைகள்…
நீங்கள் டி.வி.பார்க்கும் பழக்கம் உள்ளவர் என்றால் டி.வி. சேனல்களை மாற்ற ரிமோட்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக எழுந்து சென்று நேரிடையாக மாற்றலாம்.
காய்கறி மார்க்கெட்டுக்கும், பலசரக்குக் கடைக்கும் செல்ல இரண்டு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக நடந்து சென்று பொருட்களை வாங்கலாம்.
உங்கள் அலுவலகம், மூன்றாவது அல்லது நான்காவது மாடியில் இருந்தால் லிஃப்ட்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மாடிப்படிகளில் ஏறிச் செல்லலாம்.
நீங்கள் அலுவலகத்துக்கு பஸ்ஸில் செல்பவராக இருந்தால் அலுவலகத்தில் இருந்து பஸ்ஸில் வீட்டுக்குத் திரும்பி வரும்போது இரண்டு ஸ்டாப்புக்கு முன்னால் இறங்கி நடந்து வாருங்கள்.
நீங்கள் அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் பழக்கம் உடையவர் என்றால் கோயிலில் பிரகாரங்களை நன்கு சுற்றி வாருங்கள்.
மெல்லோட்டம்
மெல்லோட்டம் என்பது விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்துக்கும் இடைப்பட்ட சீரான தன்மை கொண்ட ஓட்டமாகும். இதை ஆங்கிலத்தில் ஜாக்கிங் (Jogging) என்பார்கள். உடலுக்கு ஏற்ற சீரிய உடற்பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இந்தப்பயிற்சியும் மாரடைப்பைத் தடுக்க உதவியாக இருக்கிறது. மேலை நாடுகளில் உள்ள பெரும்பான்மையான மருத்துவர்கள் தங்களை மாரடைப்பில் இருந்து காத்துக்கொள்ள தினமும் மெல்லோட்டத்தை மேற்கொள்கிறார்கள்.
மெல்லோட்டத்தின் பயன்கள்
இதயமானது சுருங்கும்போது உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவானது சாதாரண நிலையைவிட மெல்லோட்டத்தின்போது அதிகமாகிறது.
இதய ரத்தக் குழாய்களையும், ரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள அமைப்புகளையும் வலுவாக்குகிறது.
ரத்தக் குழாய்களின் உள்பகுதிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்களைத் தடுக்கிறது.
ரத்தமிகு அழுத்த நிலையைக் குறைக்கத் துணைபுரிகிறது.
இதயத் தமனிகளில் ஓடும் ரத்தத்தின் அளவானது அதிகமாவதால், இதயத் தமனிகளில் ரத்தம் உறைவதை தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கிறது.
ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும், டிரை கிளிசரைடையும் குறைக்க உதவுவதால், மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகிறது.
மெல்லோட்டத்துக்கான விதிமுறைகள்
விதிமுறைகள் என்று சிறப்பாக எதுவும் இல்லை. 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். மெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, ரத்த அழுத்த அளவு, நாடித் துடிப்பு, உடல் எடை ஆகியவற்றை நன்கு பரிசோதனை செய்து உங்கள் உடலின் தகுதியைக் கணித்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பொறுத்து மெல்லோட்டத்தில் ஈடுபடலாமா என்பதை முடிவு செய்யுங்கள்.
நம் நாட்டுச் சூழலில், காலையில் 8 மணிக்கு முன்னரும், மாலையில் 5 மணிக்குப் பின்னரும் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். அவைதான் இந்த உடற்பயிற்சிக்கான சிறந்த வேளைகள். மாலைப் பொழுதைவிட விடியல் பொழுதுதான் மிகவும் சிறந்தது. ஏனென்றால் காலைப் பொழுதில் வீசும் இளம் தென்றலும், மாசு படியாத நிலையில் இருக்கும் தூய்மையான காற்றும் உடல் நலத்துக்கு நல்லது.
மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மலக்குடல் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். மலச்சிக்கலால் உங்கள் மெல்லோட்டம் பாதிக்கப்படும். காலைப்பொழுதில் மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சைச் சாறும், தேனும் கலந்து குடிக்கலாம். இதனால் மெல்லோட்டத்தின்போது உடலில் இருந்து வெளியாகும் பலவகையான உப்புகளின் இழப்பையும், நீரின் இழப்பையும் ஈடுசெய்யலாம்.
மெல்லோட்டத்தை இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்றால் முதல் முதலாக அரை கிலோ மீட்டர் தூரம் மட்டும் ஓடி நிறுத்திக் கொள்ளுங்கள்.
பின்னர் உங்கள் உடல் அமைப்பு வயது, ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிறிதாக ஓடும் தூரத்தை அதிகப்படுத்துங்கள். நடுத்தர வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் ஓடுவது உடல் நலத்துக்கு உகந்தது அல்ல.
சைக்கிள் பயிற்சி
இதயத்துக்கு உகந்த, உயிர்வளியைப் பெருக்கும் உடற்பயிற்சிகளில் சிறந்தது சைக்கிள் பயிற்சி. இது, குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த எளிமையான உடற்பயிற்சியாகும்.
அமெரிக்காவில், பால் டட்லி ஒயிட் என்ற மருத்துவர் சைக்கிள் பயிற்சியில் ஒரு மிகப்பெரிய புரட்சியைச் செய்திருக்கிறார். உடல் நலத்துக்கான சைக்கிள் பயிற்சி (Cycling for Health) என்ற நல இயக்கத்தைத் தொடங்கியதோடு அல்லாமல், இந்த இயக்கத்தின் விளைவாக, அமெரிக்காவில் உள்ள பெரும்பான்மையான தேசியப் பூங்காக்களில் கார்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யவும் இவர் காரணமாக இருந்தார்.
அமெரிக்காவில் உள்ள பெரும்பான்மையான தேசியப் பூங்காக்களில் அங்கு வரும் மக்கள் பயன்படுத்துவதற்காக சைக்கிள்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் மக்கள் தங்களுடைய உடல் நலத்தைப் பேணுவதற்காகப் பல மணிநேரம் இயற்கையான சூழலில், திறந்த வெளியில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வது வழக்கமாகும்.
பிரான்ஸ் நாட்டு மருத்துவர்கள் சைக்கிள் பயிற்சியைப் பல வகையான நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள். உடல் பருமன், ரத்தமிகு அழுத்த நோய், குடல் இறக்கம், மூட்டுச்சிதைவு நோய், வாதக் காய்ச்சல் நோய், முதுகுத் தண்டுவடம் நழுவுதல், கால் பெரு நரம்பு அழற்சி போன்ற நோய்களைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சையில், சைக்கிள் பயிற்சியையும் ஒரு முக்கியமான அம்சமாக வைத்திருக்கிறார்கள்.
மேலை நாடுகளில் பெரும்பான்மையான மருத்துவமனைகளில் சைக்கிள் பயிற்சியை ஒருவகையான மருத்துவமுறையாகக் கையாள்கிறார்கள். சிலவகையான நோயாளிகளுக்கு அவர்கள் தங்கள் உடல் நலத்தை மீண்டும் பெற சைக்கிள் பயிற்சியைப் பரிந்துரைக்கிறார்கள். மேலும் நீண்டநாள்களாகப் படுக்கையில் இருக்கும் நோயாளிகளின் வலுவிழந்த தசைகள் மீண்டும் உயிர்பெற, சைக்கிள் பயிற்சியை அளிக்கின்றனர்.
ஹாலந்து நாட்டில் உள்ள பள்ளிகளில் சைக்கிள் பயிற்சியை விளையாட்டுக் கல்வியில் ஒரு பாடமாக வைத்துள்ளனர். தினமும் பள்ளி நேரத்தில் மாணவ& மாணவிகள் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தியுள்ளனர். இத்தகைய முயற்சியின் காரணமாக நடல் நலக்குறைவால் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவ& மாணவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகச் சொல்கின்றனர்.
அன்றாடம் சிலமணி நேரம் மேற்கொள்ளும் சைக்கிள் பயிற்சியானது, இதயத் தசைகளை நன்கு வலுவாக்குவதோடு அல்லாமல், இதயத் தசைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவைப் பன்மடங்கு அதிகமாக்குகிறது என்கிறார் பால் டட்லி ஒயிட்.
நீச்சல் பயிற்சி
நீச்சல் பயிற்சயாலும் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன.
நீச்சல், முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் ஏற்ற உடற்பயிற்சியாகும்.
உடல் ஊனமுற்றவர்களுக்குக்கூட இது மிகச்சிறந்த உடற்பயிற்சி.
உடலை வலுவாக்கவும், கிடைத்த வலுவைப் பாதுகாத்துக்கொள்ளவும் உதவுகிறது.
நீச்சல் பயிற்சி, உடலில் உள்ள பலவகையான உள் உறுப்புகளுக்கும் நரம்பு அமைப்புகளுக்கும் வலுவை அளிக்கிறது.
குறைந்த காலத்தில் உடலில் உள்ள பலவகையான தசைகளுக்கு நல்ல வலுவை அளிக்கிறது.
உடலின் தேவையற்ற, அதிகமான எடையைக் குறைக்க துணை புரிகிறது.
நீச்சல் பயிற்சியின்போது நீர் உடலுக்கு இயற்கையின் தடுப்பாற்றலை அளிக்கிறது.
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் தொடர்ந்து நீச்சல் பயிற்சி மேற்கொள்வதால் தேவையற்ற கலோரிகளை எரிக்க முடியும்.
நீச்சலானது உள்ளத்துக்கு எளிதில் உணர்ச்சிவசப்படாத மனப்பக்குவத்தையும், எந்தச் செயலையும் நிதானத்துடன் செய்யும் மனப்பக்குவத்தையும் அளிக்கிறது.
நீச்சல் பயிற்சியின் சிறப்புகள்
நீச்சல், கவலையை மறக்க மிகச்சிறந்த மருந்தாகும். ஏனென்றால், நீந்தும்போது கவனம் முழுவதும் நீச்சலில் ஒரு முகப்படுவதால், மனிதன் தன்னுடைய கவலையை மறக்க நீச்சல் துணைபுரிகிறது.
நீச்சல், முதுகெலும்புப் பகுதியில் உள்ள தசைகளை வலுப்பெறச் செய்வதோடு, முதுகெலும்பு அமைப்புகளை வலுப்படுத்த துணைபுரிகிறது.
கடல் நீரிலும், ஆற்று நீரிலும் இயற்கையாகப் பொதிந்திருக்கும் அயனிகள, உடலுக்கு நன்மை அளிப்பதாக மருத்துவ அறிஞர்கள் சொல்கின்றனர்.
நீச்சல், உடலில் உள்ள மேற்புறத் தசைகளுக்கு மட்டுமின்றி உடலின் கிழ்ப்புறப் பகுதியில் உள்ள தசைகளுக்கும் ஒரே சமயத்தில் நல்ல பயிற்சியைத் தரக்கூடியது.
இதயத் தசைகள் நன்கு வலுப்பெற நீச்சல் உதவி செய்கிறது.
thanks : http://knowingyourself1.blogspot.com/2011