Saturday, January 21, 2012

மஞ்சள் காமாலை என்பது நோயா?

மஞ்சள் காமாலை என்பது நோயா?

காமாலை என்றழைக்கப்படும், மஞ்சள் காமாலையை, பரிசோதனைகள் ஏதும் செய்யாமல், கண்கள் மஞ்சள் நிறமாவதை வைத்து, முன்னோர்கள் கண்டறிந்தனர். வீட்டு வைத்தியம் செய்து வந்தனர். எண்ணெய், உப்பு அற்ற உணவு அல்லது புரோட்டீன் சத்து நிறைந்த உணவுடன், ஆட்டுப்பால், கீழா நெல்லி இலை விழுது கொடுத்து வைத்தியம் செய்தனர். “டாக்டரிடம் போகாதீர்கள். ஆங்கில மருத்துவத்தில், மஞ்சள் காமாலைக்கு சிகிச்சையே கிடையாது’ என்றும் கூறினர். ஆனால், அலோபதியில் சிகிச்சை உண்டு. “ஜானே’ என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து “ஜாண்டிஸ்’ என்ற ஆங்கில வார்த்தை உருவானது. 19ம் நூற்றாண்டில் தான், “ஜானே’ என்ற வார்த்தையே உருவானது. எல்லா காமாலையும், மஞ்சள் காமாலை அல்ல என்பதை அப்போதே மருத்துவர்கள் உணர்ந்திருந்தனர். ஒவ்வொருவரின் உடல் நிலைக்கேற்ப, பாதிப்புக்கு ஏற்ப, இந்த அறிகுறியின் தன்மை மாறுபடும். சிலர் முற்றிலும் குணமடைந்தனர்; சிலருக்கு சில காலம் பிடித்தது; சிலர் மரணமடைந்தனர்.
எல்லாம் விதிப்பயன் என்று சொல்வதை விட, ஏன் இப்படி ஏற்பட்டது என்று ஆராயும்போது தான், எல்லா அறிகுறிகளும் ஒரே வகையான நோயை சார்ந்தது அல்ல என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். காமாலை என்பது நோயே அல்ல; உடலில் ஏற்படும் நோய்க்கான அறிகுறியே. ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள், அல்ட்ராசவுண்டு உட்பட ஸ்கேன்கள் ஆகியவற்றின் மூலம் காமாலை அறிகுறியை துல்லியமாக கண்டறியலாம். மேலும், மஞ்சளாக இருப்பவர்கள் அனைவருமே, காமாலை அறிகுறியுடன் இருப்பவர்கள் என்று சொல்ல முடியாது. “புளோரசன்ட்’ விளக்கின் கீழ் நிற்கும் அனைவரின் தோலும் மஞ்சளாகத் தான் தெரியும். கேரட், பப்பாளி ஆகியவை சாப்பிடும்போதும், தோலின் மேல் கெரோட்டின் படிந்து, சற்று மஞ்சளாகக் காட்சி அளிக்கும். கண் விழியின் மேல் படலத்தின் கீழ் கொழுப்பு படிந்தாலும், தூசியாலும், கண்கள் சில நேரங்களில் மஞ்சளாகத் தெரியும். இதுவும் காமாலை அல்ல. “பிலுருபின்’ என்ற நிறமி, கண் வெளிப்படலம் மற்றும் தோலில் படிந்து கறை ஏற்படும்போது தான், அதை காமாலை என்று கூற முடியும். சிறுநீர், வியர்வையிலும் சில நேரங்களில் மஞ்சள் நிறம் வெளிப்படும். ரத்தத்தில் உள்ள பழைய சிவப்பு அணுக்கள் மண்ணீரல் மற்றும் கல்லீரலில் சிதைக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றன. அப்போது, “பிலுருபின்’ என்ற நிறமியும் வெளிப்படும். ரத்தத்தில் இந்த நிறமியின் அளவு மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்தால், கண்ணில் மஞ்சள் நிறம் தென்படும். சிவப்பு அணுக்கள், அளவுக்கு அதிகமாக சிதைந்து போகும்போது, அதை வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்தி, வெளியேற்றும் பணியை மேற்கொள்ளும் கல்லீரல், அதிக வேலைப்பளுவால் திணறும். அப்போது மஞ்சள் காமாலை ஏற்படும். பாரம்பரியமான சில நோய்கள், மலேரியா, சில மருந்து வகைகளை உட்கொள்வது ஆகியவற்றால் இது போன்று மஞ்சள் நிற அறிகுறிகள் ஏற்படலாம். பச்சை வேர்க்கடலையை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் கூட, சிலருக்கு மஞ்சள் காமாலை ஏற்படும். அதில் உள்ள “அப்ளோடாக்சின்’ என்ற உட்கூறு, கல்லீரல் செல்களுக்கு விஷமாக அமைந்து விடும். சில நேரங்களில், கல்லீரலே பாதிப்படைந்து, அளவுக்கு அதிகமான பிலுருபினை வெளியேற்ற முடியாமல் போகும். பாரம்பரிய காரணங்களால் இது போன்று ஏற்படலாம். எனினும், மிக குறைந்த அளவில் தான் பாதிப்பு ஏற்படும்; உயிருக்கு ஆபத்து இல்லை.
பிறந்த குழந்தைகளுக்கு, கல்லீரல் செல்கள் போதுமான அளவு வளர்ச்சி அடையாமல் போனாலோ, தாய்க்கும் -குழந்தைக்கும் ரத்தப் பிரிவு ஒத்துப் போகாமல் இருத்தல் ஆகியவற்றால், குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏற்படலாம். எனினும், இது முற்றிலும் குணப்படுத்தக் கூடியதே.
ஹெப்பாடைட்டிஸ் ஏ, பி, சி, டி, இ, ஹெர்பஸ், லெப்டோஸ்பைரோசிஸ், சைட்டோமெகாலோ வைரஸ் ஆகியவை கல்லீரல் செல்களை பாதித்து, மஞ்சள் காமாலையை உருவாக்குகின்றன. மது குடித்தால் கல்லீரல் விஷமாகி விடும். தொடர்ந்து பல ஆண்டுகள் மது அருந்தினால், கல்லீரல் பாதிப்படைந்து மஞ்சள் காமாலை ஏற்படும். கல்லீரல் நாளங்களில் கல், புற்றுநோய், அடைப்பு உருவாகி தடை ஏற்படும்போது, பிலுருபின் வெளியேறுவதில் சிக்கல் உருவாகும். இதனால், போதுமான அளவிலான வெளியேற்றம் கூட தடைபட்டு விடும். இதனால் பிரச்னை உருவாகும். அனைத்து விதமான காமாலைக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை முறையை பின்பற்ற முடியாது. ரத்தம் மற்றும் சிறுநீரை, அறிவியல் ரீதியான பரிசோதனை செய்து, எந்த மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்த பிறகே, சிகிச்சை துவங்க வேண்டும். இளைஞர்களுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலையில் 80 சதவீதம் ஹெப்பாடைட்டிஸ் ஏ வைரசால் உருவாகிறது. இதற்கு சிகிச்சை தேவைப்படாது. சில வாரங்களில் தானாகவே குணமாகி விடும். ஆனால், இதை வைத்து அற்புதம், அதிசய சிகிச்சை என விளம்பரப்படுத்துகின்றனர். ஹெப்பாடைட்டிஸ் ஏ மற்றும் பி ஆகிய நோய்கள் முற்றிலும் குணமாக்கக் கூடியவை. குழந்தை பிறந்த ஓராண்டு நிறைவதற்குள், ஹெப்பாடைட்டிஸ் பி தடுப்பூசி, மூன்று முறை போடப்படுகிறது. இரண்டு ஆண்டு நிறைவடைந்ததும், ஹெப்பாடைட்டிஸ் ஏ வகை நோய்க்கான தடுப்பூசி இரண்டு முறை போடப்படுகிறது. குழந்தை பருவத்தில் ஊசி போட தவறினால், வளர்ந்த பிறகு போட்டுக் கொள்ளலாம். வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றின் மூலம் ஹெப்பாடைட்டிஸ் பி மற்றும் சி நோய்களை குணப்படுத்தி விடலாம். ஹெர்பஸ் தொற்று, லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் சைட்டோமெகாலோ வைரஸ் நோய்களுக்கு குறிப்பிட்ட மருந்துகள் உள்ளன. நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்தால், சில வகையான மஞ்சள் காமாலையை குணப்படுத்தி விடலாம். மது அருந்தாமலிருந்து, நோயை குணப்படுத்தும் மருந்துகளை சரியாக சாப்பிடவில்லை எனில், மஞ்சள் காமாலை பாதிப்பு தீவிரமாகி விடும். அறுவை சிகிச்சை மூலம் சரியாகக் கூடிய நோய்களை, ஸ்கேன், லேப்பராஸ்கோபி செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். பரிசோதனையின் அடிப்படையில் சரியான சிகிச்சை அளிப்பது இந்நோய்க்கு அவசியம். அறியாமை, பயம் காரணமாக சிகிச்சையில் தாமதமானால் மரணம் கூட ஏற்படலாம். துரதிருஷ்டவசமாக பெரும்பாலானோர், சுய பரிசோதனை செய்து, போலி டாக்டர்களிடம் சென்று “இயற்கை மருத்துவம்’ செய்து கொள்கின்றனர். “ஹிட் ஆர் மிஸ்’ என்பது விளையாட்டுத்துறைக்கு வேண்டுமானால் பொருந்தலாம்; மனித வாழ்க்கையை பாதிக்கும் வகையிலான மருத்துவ முறைக்கு பொருந்தாது!
THANKS : VAYAL

No comments: