Tuesday, May 10, 2011

இறப்பிற்குப் பின் உயிரின் நிலை

இறப்பிற்குப் பின் உயிரின் நிலை
இறந்தபின் மனிதனுடைய வினைப்பதிவுகள் என்னவாகிறது? இது பரவலாக நிலவி வரும் வினா. வினைப் பயன் விட்டுப் போகாது. ஒவ்வொரு உயிரும் தன் வினைப் பயனைத் தூய்மை பெறும்வரையில் வேறு உடலில் சேர்ந்தேனும், தன் வினைப்பயனாக துன்பத்தையோ, இன்பத்தையோ அனுபவித்தே தீரும். அதற்காகப் புதிதாகப் பிறவி எடுக்க வேண்டும் என்பதில்லை.
ஒரு குழந்தை பிறந்து அது தன் பன்னிரெண்டு வயது வரை தன்னிச்சையாக வினைகளைப் பெறவில்லை; பதிவுகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்று வைத்துக் கொள்வோம். பன்னிரண்டு வயதிலே இறந்து விட்டது. இந்நிலையில் அக்குழந்தையின் உயிரின் நிலை என்ன? 12 வயதிற்குள்ளாக எந்தக் குழந்தை உயிர் விட்டாலும் தன், தாய் அல்லது தந்தை, பாட்டன், பாட்டி போன்ற கருத்தொடரான உறவினர்களின் உயிரோடு அடைக்கலமாகி விடும். விரிந்த உயிர் சுருங்கி விடுவதுபோல அவ்வுயிருக்கு வேறு எந்தப் பதிவும் இல்லை. ஆகவே அந்த உயிரில் பதிவு பெற்ற உயிர்கள் தாயும் தந்தையும்தான். எனவே, அவ்வுயிர் தாய், தந்தையரிடமே சேர்ந்து விடும். அவ்வுயிருக்கும் அமைதி ஏற்பட்டு விடும். பெற்றோர்களுக்கும் அக்குழந்தையை வளர்த்தமையால் அவர்களின் வினைகளும் ஒரு பகுதி கழிந்து விடுகின்றன. இவ்வாறு இருவர் வினைகளும் கழிந்த ஒரு கூற்றுதான் அக்குழந்தையின் முடிவு.

இறப்பிற்குப் பின் உயிரின் நிலை பற்றி நாம் பல கதைகளைச் சொல்லக் கேட்டிருக்கிறோம். இறந்த உயிர் வானுலகம் செல்லும். வானுலகத்தில் சொர்க்கம், நரகம் உண்டு. நல்வினை செய்த உயிர்கள் சொர்க்கத்திற்குச் சென்று இன்பமுறும். தீவினை செய்த உயிர் நரகம் சென்று அங்குள்ள நெருப்புக் கொப்பரையில் விழப்படச் செய்தும், செக்கிழுத்தும், பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்களாலும் துன்புறும் என்று கருடபுராணத்தில் கதை சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு, மனிதனுக்கு அச்சமூட்டி, தவறுகள் செய்யாது இருப்பதற்காக, தீவினைகள் செய்யாது இருப்பதற்காக பல கதைகள் சொல்லப்பட்டு வந்தன. அக்காலத்தில் அவை நன்மையே அளித்து வந்தன.

இக்காலத்தில் இதை நம்புபவர்கள் இல்லை. இந்த விஞ்ஞான காலத்தில் சொர்க்கம், நரகம் என இரு உலகங்கள் பூமிக்கு மேல்புறமாக இருக்கிறது என்பதை நம்பவும் முடியாது. காலத்தால் அக்கதைகள் மறைந்து விட்டன. உண்மையான சிந்தனைக்குரிய, அறிவுக்குப் பொருத்தமான நல்ல கருத்துக்களை, நம் பழக்கத்தின் காரணமாக ஏற்றுக் கொள்ள சிரமமாக இருந்தாலும் உண்மையான கருத்துக்களை மனித குலத்தின் வாழ்வின் நலத்திற்காக வெளியிட்டுத் தான் ஆக வேண்டும். இவற்றை இன்றில்லையென்றாலும் பிற்காலத்தில் வரும் சிந்தனையாளர்களுக்கு இது மிகவும் அவசியம். மரணமென்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டுமானால் உயிரினத்தில் அமைந்துள்ள கருமைய இரகசியங்களைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

by Vethathiriyam for World Peace

No comments: