Thursday, January 13, 2011

வெற்றியின் இரகசியம்

வெற்றியின் இரகசியம்

ஒரு கப்பல் கட்ட வேண்டுமா? உங்கள் ஆட்களைக் கூப்பிட்டு, மரத்தைக் கொண்டுவரச் சொல்லி, வேலைகளைப் பிரித்துக்கொடுத்து, உத்தரவுகள் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்காதீர்கள். முடிவு இல்லாத அகண்ட கடலை நினைத்து ஏங்குவதற்கு அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள் போதும்.
எல்லோரையும் நம்முடைய பயணத்தில் சேர்த்துக் கொள்ளச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்? அவர்கள் ‘நானும் வருகிறேன்’ என்று சொன்னால் மட்டும் போதாது. அவர்களின் அடி மனத்தில் நுழைந்து பாதித்து, உங்களைவிட அவர்கள் அதிக உற்சாகமாகப் புறப்படும்படி செய்துவிட வேண்டும்.
மனிதர்களை கூட்டு சேர்த்துக்கொள்வது என்றால், அவர்கள் முழுக்க முழுக்க ‘இது என்னுடைய வேலை’ என்று சொந்தம் கொண்டாட வேண்டும். அதற்கு, தொழில் இலக்குகளோ, புள்ளி விவரங்களோ போதாது. ஒரு லட்சிய வேள்வியின் பயனாக விளைவது அது.
கூட்டாளிகள் வந்து சேர வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் வெற்றி கிடைக்க வேண்டும். அதற்குப் பெயர்தான் மும்முனைத் திட்டம்.
எடுத்த காரியம் வெல்ல வேண்டும்.
நாம் வெல்ல வேண்டும்.
நம்முடன் சேர்ந்தவர்கள் வெல்ல வேண்டும்.
நம்முடைய லட்சியத்தால் கவரப்பட்டு, தோழர்கள் தானாக வந்து சேர்ந்து கொள்ள வேண்டும்; நம் சுருதியில் இழைந்து பாட வேண்டும். யாரையும் வலிமையைக் காட்டி இழுக்கக் கூடாது.
கட்டாயப்படுத்தி கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டோமானால், எப்போது அவர்கள் நம்முதுகில் குத்துவார்கள் என்றே தெரியாது. நம் முதுகைக் காப்பாற்றுவதற்கே நேரம் சரியாகப் போய்விடும். ஆனால் பணியின் மீது முழு ஈடுபாட்டை அவர்கள் மனத்தில் ஏற்படுத்திவிட்டால் போதும்; எப்போதும் நமக்குத் துணையாக இருப்பார்கள்.

No comments: