Monday, April 4, 2011

இதயத்துக்குள் மின்சாரத் தடங்கல்!

இதயத்துக்குள் மின்சாரத் தடங்கல்!
- சிக்கல் தீர்க்கும் புதிய தொழில்நுட்பம்
தாயின் கருவறையில் இருக்கும்போதே, இதயத் துடிப்பு ஆரம்பிக்கிறது.



நம் இதயம் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் முறை துடிக்கிறது. அதாவது, நிமிடத்துக்கு 60 முதல் 100 வரை. அப்படி ஓய்வே இல்லாமல் துடிப்பதால்தான், ரத்தமும் ஆக்சிஜனும் உடல் முழுமைக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. இதயம் தானாகத் துடிப்பது இல்லை, இதயம் இயங்கவும் ஓர் ஆற்றல் தேவை. அது இல்லை என்றால், இதயம் துடிப்பது நின்றுவிடும். இதயத்தை இயங்கவைக்கும் மின் உற்பத்தி நிலையம் இதயத்தின் மேல் வலது அறையில் உள்ளது. இந்த அறையில் உள்ள சைனஸ் நோட் என்பதுதான், இதயம் இயங்கத் தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. இந்த 'சைனஸ் நோட்’டை மனிதனின் ஜெனரேட்டர் என்று சொல்லலாம். இதில் பாதிப்பு ஏற்பட்டால், இதயத் துடிப்பு குறைகிறது. சிலருக்கு இதயத்தின் பல பகுதிகளில் இருந்தும் மின் சக்தி உற்பத்தியாகும். இதனால் திடீர் திடீரென்று இதயத் துடிப்பு அதிகரித்து, மரணம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு!
சென்னை அப்போலோ மருத்துவமனையின் எலக்ட்ரோ பிசியாலஜி டாக்டர் ஏ.எம்.கார்த்திகேசனிடம் பேசினோம். ''இதயம் என்பது மின் உற்பத்தி மூலமும், ரத்தக் குழாய்களில் ஊட்டச் சத்துகள் இதயத் தசைக்குக் கொண்டுசெல்லப்படுவதன் மூலமும் இயங்குகிறது. இதயத்தில் அடைப்புகள் ஏற்படும்போது, ஊட்டச் சத்து கொண்டுசெல்லப்படுவது பாதிக்கப்பட்டு, இதயம் செயல் இழக்கிறது. இதயம் துடிக்கத் தேவையான மின் சக்தி உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதும், மரணத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இந்தப் பிரச்னைக்கு ஆளானாலும், இதுபற்றி போதிய விழிப்பு உணர்வு இன்னமும் ஏற்படவில்லை.


இதயம் துடிக்கத் தேவையான மின் சக்தி, முதலில் வலது புறம் உள்ள மேல் அறையில் உற்பத்தியாகி, இடது புறம் மேல் அறைக்கு சென்று, அங்கிருந்து கீழ் அறைகளுக்குப் பாய்கிறது. இந்த சைனஸ் நோட் எப்போதும் ஒரே அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யாது. மனித உடலின் செயல்பாட்டுக்கு ஏற்ப உற்பத்தி மாறுபடும். அதாவது தூங்கும்போது குறைவாகவும், ஓடுதல், மாடிப் படி ஏறுதல், பயம் ஏற்படும்போது என சமயங்களில் அதிகமாகவும் உற்பத்தியாகி இதயத்தை வேகமாகத் துடிக்கச் செய்கிறது.
இந்த இதயத் துடிப்பில் ஏற்படும் மாறுபாட்டை அரித்​மியா என்போம். இதில் பாதிப்பு ஏற்பட்டு சாதாரண நேரத்திலும் இதயம் வேகமாகத் துடிப்பதை, டாக்கி அரித்மியா என்போம். அதாவது, இதயத்தின் எந்த ஒரு திசுவில் இருந்தும் தேவை இல்லாமல் மின்சாரம் உற்பத்தி​யாகத் தொடங்கிவிடுவது. மேல் பகுதியில் இப்படி உற்பத்தியானால், உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால், திடீர் படபடப்பு, வியத்துக்கொட்டுதல், மயக்கம், மூச்சு வாங்குதல் போன்ற பிரச்னைகள் உண்டாகும். இதயக் கீழ் அறைகளில் மின் உற்பத்தி ஏற்படுமானால், உயிருக்கு ஆபத்து நேரிடும்.
இந்த அறிகுறிகள் அடிக்கடி ஏற்பட்டால், சிலர் மருத்துவரை அணுகி மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், மருந்து மாத்திரைகளால் இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு அளிக்க முடியாது. நாளுக்கு நாள் பிரச்னையின் தீவிரம் அதிகரிக்கும்போது, ஸ்ட்ராங் டோஸ் எடுத்துக்கொள்வார்கள். வாழ்நாள் இறுதி வரை மருந்து, மாத்திரைகள் எடுக்கவேண்டும்.
இந்த பிரச்னை கருவில் இருக்கும் குழந்தை முதல் வயதானவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். வயதானவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் வர வாய்ப்பு உள்ளது. இது தவிர உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதய வால்வு பிரச்னை, தைராய்டு, ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்களுக்கும், புகையிலை, மதுப் பழக்கம் உள்ளவர்​களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம். இதை ஈ.சி.ஜி. எடுப்பதன் மூலம் கண்டுபிடிக்கலாம். இதில் தெரியவில்லை என்றால், எலக்ட்ரோ பிசியாலஜி ஸ்டடி மூலம் கண்டறியலாம்.
இதயத்தின் எந்தப் பகுதியில் தேவை இல்லாத மின் சக்தி உற்பத்தியாகிறது என்பதைக் கண்டறிந்து, குறிப்பிட்ட திசுவை ரேடியோ ஃப்ரீக்வன்ஸி எனர்ஜி மூலம் அழித்துவிட முடியும். 1 மி.மீ. அளவுக்கு அந்தத் திசுவை அழிக்கும்போது, கூடுதல் மின் உற்பத்தி தடுக்கப்படுகிறது. இதற்காக 3டி எலக்ட்ரோ அனாடமிகல் மேப்பிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். தற்போது கார்ட்டோ 3 தொழில்நுட்பத்தை இந்தியாவிலேயே முதன் முறையாகப் பயன்படுத்துகிறோம். இந்தியா​வில் ஒன்றிரண்டு இடங்களில்தான் இந்தத் தொழில்நுட்பம் உள்ளது.
இதன்படி, இதயத்தின் நான்கு அறைகளும் தனித் தனியாக மேப்பிங் செய்யப்படும். இதயத்தைச் சுற்றி காந்த புலன்கள் உருவாக்கப்படும். இந்தத் தொழில்நுட்பம் ஜி.பி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு, எந்த இடத்தில் பிரச்னை உள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்துவிடும். கால் தொடையில் உள்ள ரத்தக் குழாய் வழியாக ஒயர் போன்ற ஒன்றை உள்ளேவிடுவோம். (ஆஞ்ஜியோகிராம் செய்யப்படுவதுபோல) அந்த ஒயரின் முனையும் காந்தத் தன்மையுடன் இருக்கும். அது பிரச்னைக்குரிய இடத்தில் உள்ள செல்லை அழித்துவிடும். இதனால் வலி இல்லை, தழும்புகள் இல்லை, அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த நாளே வீட்டுக்குச் செல்லலாம். இதனால், ஆயுள் முழுக்க மருந்து மாத்திரை சாப்பிடும் தொல்லையில் இருந்தும் விடுபட​லாம்!'' என்கிறார்.
கவனமாக இருப்போம்!
நன்றி - பா.பிரவீன்குமார்

No comments: