Wednesday, September 28, 2011

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இடுப்பில் கடுமையான வலி...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இடுப்பில் கடுமையான வலி...

எனக்கு முதுகுத் தண்டுவடவில்லை சற்று விலகியுள்ளதால், இடுப்பில் கடுமையான வலி இருக்கிறது. இதற்கு அறுவைச் சிகிச்சை செய்து கொள்வதற்குப் பயமாக இருக்கிறது. இடது பக்க இடுப்பிலிருந்து கால் விரல்கள் வரை வலி இருக்கிறது. தாங்கித் தாங்கித்தான் நடக்க முடிகிறது. இதைக் குணப்படுத்த ஆயுர்வேதத்தில் மருந்துகள் உள்ளனவா?
ராஜலக்ஷ்மி, தஞ்சாவூர்.

சித்தரத்தை என்று ஓர் ஆயுர்வேத மூலிகை மருந்து இருக்கிறது. இது ஒரு சிறந்த வலி நிவாரணி. அம்மி அல்லது சொரசொரப்பான சிமென்ட் தரையில் இஞ்சிச் சாறு விட்டு, சித்தரத்தையை அதன் மேல் நன்றாக அழுத்தித் தேய்க்கவும். அதிலிருந்து வரும் விழுது போன்ற பகுதியை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். வீட்டில் பெரியவர்கள் யாராவது இருந்தால், அவர்களுடைய கட்டை விரல்களால் உங்களுடைய கீழ் முதுகுத் தண்டுவடப் பகுதியை நடுப்பகுதியிலிருந்து கீழ்ப்பகுதி வரை அழுத்திக் கொண்டே வரச் சொல்லவும். நீங்கள் குறிப்பிடும் பகுதியில் அழுத்தும்போது, வலியை நன்றாக உணர்வீர்கள். அந்தப் பகுதியை ஒரு பால் பாயிண்ட் பேனாவினால் வட்டமிடச் சொல்லவும். ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் சித்தரத்தை விழுதினை, மேலும் சிறிது இஞ்சிச் சாறுவிட்டுத் தளர்த்தி, அடுப்பில் வெதுவெதுப்பாகச் சூடாக்கி, பேனாவினால் வட்டமிட்டுள்ள பகுதியின் மீது பற்று இடச் சொல்லவும். பற்று குளிர்ந்துவிடாமலிருக்க, மின்விசிறியை அணைத்துவிடவும். படுத்திருக்கும் அறையில் காற்றோட்டமில்லாமல் இருத்தல் நலம். எத்தனைக்கு எத்தனை இந்தப் பற்று வெதுவெதுப்பாக இருக்கிறதோ, அத்தனைக்கு அத்தனை நல்லது. குப்புறப் படுத்திருக்கும் நீங்கள், உணவைச் சாப்பிட்டிருந்தால், வயிற்றில் வலி ஏற்படும் என்பதால், உணவைச் சாப்பிடும் முன்பாக, அதாவது காலி வயிற்றில் , பற்று இட்டுக் கொள்வது நலம். மேலும் குடல் காற்று, மலம், சிறுநீர் ஆகியவற்றின் தேக்கமும் வயிற்றில் இல்லாதிருப்பதும் நலமே. காலை, மாலை சுமார் அரை மணி நேரம் இதுபோல, தொடர்ந்து 14 நாட்கள் வரை செய்து கொள்ளலாம்.
அதன் பிறகு, ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய சஹசராதி மற்றும் முறி வெண்ணெய் ஆகியவற்றைக் கலந்து, ஒரு கிண்ணத்தில் சிறிது சூடாக்கி, பஞ்சில் முக்கி, மேல்குறிப்பிட்ட மாதிரி படுத்துக் கொண்டு, இடுப்பில் வலி உள்ள பகுதியில் போட்டு ஊற வைக்கவும். பற்று இட்டபோது கடைப்பிடிக்கப்பட்ட, அதே சட்டதிட்டங்களை எண்ணெய் ஊற வைக்கும்போதும் கடைபிடிக்கவும். இந்தச் சிகிச்சை முறையையும் சுமார் 14 நாட்கள் வரை தொடர்ந்து செய்து கொள்ளவும்.
இப்படியெல்லாம் செய்து கொள்வதால் என்ன நன்மை கிடைக்கும்? என்று நீங்கள் நினைக்கலாம். மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகள், ஒரு வலி நிவாரணி மட்டுமல்ல, இடுப்புப் பகுதியில் அமைந்துள்ள தசை நார்களைத் தளர்த்தி, இடுப்பை எளிதாக வளைக்கச் செய்யும். உங்களால் எளிதாக குனிந்து நிமிர முடியும். அங்குள்ள முதுகுத் தண்டுவட எலும்புகளையும் வில்லைகளையும் வலுப்படுத்தும். நரம்புகளின் செயல்திறனைக் கூட்டும்.
குடலில் வாயுவின் அழுத்தமும், பழைய மலத்தின் தேக்கமுமிருந்தால் எந்தச் சிகிச்சை முறையும் உங்களுக்கு நிவாரணத்தைத் தர இயலாது. அதனால் நீங்கள் உணவில் கிழங்கு, மாவுப் பண்டங்கள், முற்றிய வாழைக்காய், அவரைக் காய், கொத்தவரங்காய், பூசணிக்காய், பரங்கிக்காய் முதலிய காய்கறிகள், பருப்பு, மசாலாப் பொருட்கள் அதிகம் சேரும் உணவு வகைகளைத் தவிர்க்கவும். மிளகு, மிளகாய், சுண்டைக்காய் வத்தல், பாகற்காய் முதலியவை மிதமாகச் சேர்க்கலாம். அதிக அளவில் கூடாது. முளைக்கீரை, முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை , கோவைக்காய், வல்லாரை, தூதுவளை, மிதிபாகல் பிஞ்சு, அவரைப் பிஞ்சு, வெண்டைக்காய் போன்றவை சாப்பிட நல்லது. இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை நல்லது. பால், நெய் , தயிர், வெண்ணெய், வாழைப் பழம், மாம்பழம், இனிப்பு மாதுளம் பழம், திராட்சைப் பழம், அரிசி, கோதுமை, உளுந்து போன்றவை சாப்பிடலாம்.
ஒரு யோகராஜகுக்குலு எனும் ஆயுர்வேத மாத்திரையை நன்றாகப் பொடித்து, 10 - 15 சொட்டுத் தான்வந்திரம் 101 எனும் நெய் மருந்தைக் குழைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 28 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, உங்கள் உபாதைக்கு நல்ல ஒர் ஆயுர்வேத மருந்தாகப் பயன்தரும்.

No comments: