Monday, March 28, 2011

கடவுளைக் காணலாம்

காமத்தை கடந்தால் கடவுளைக் காணலாம் என்பது நமது சித்தாந்தங்களில் ஒன்று . புனிதமான கோயில்களில் ஏன் காமம் ததுப்பும் சிலைகள்? சிவலிங்கத்தை கூட ஆண் பெண் ஆலிங்கம் செய்யும் ஒரு தத்துவமாக விளக்கம் தரும் முயற்சிதான் என்ன?

மனதை கடந்து செல்லவேண்டும் எப்படி ? காமம் என்னும் உயிர்ச் சக்தியை மனம் கடந்து செல்லும் போது எதை கடந்து உள்ள சென்றால் கட+உள் = கடவுளை காணலாம்? உயிர் என்று நாம் எதை குறிப்பிடுகின்றோம்? உயிருக்கு எதாவது உருவம் இருக்கிறதா? நாத விந்து என்று நமது முன்னோர்கள் எதை சொன்னார்கள்? உயிர் நிலை தானே இந்த நாத விந்து. காமத்தை அடக்கலாமா? அது அடக்கவேண்டிய ஒன்று அல்ல. சில சமயங்களில் தவிர்க்க வேண்டிய ஒன்று. நீரிலே அடக்கும் ஒரு பந்து எப்படி மிகவும் வீறுக் கொண்டு மேல் எழுப்புகிறதோ அப்படிதான் காமமும் அடக்க அடக்க இன்னும் அதிகமாகி நம்மை அழித்துவிடும். எத்தனை சாமியார்களின் வாழ்க்கையை பாருங்கள், மண்ணாலும் பெண்ணாலும் பொண்ணாலும் விழ்ந்தவர் கோடி.

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்து சங்கத்தின் தலைவர் அவர்களை பார்த்து பேசிக் கொண்டிருந்த போது சமீபத்தில் ஒரு பிரபலமான இந்திய நாட்டின் செஸ்க் சாமியாரின் சீடர்களின் நிகழ்வு ஒன்று மலேசியாவில் நடந்தது. அதில் இந்து சங்கதின் துணைத்தலைவர் கலந்து கொண்டு பேசியதற்காக பத்திரிக்கைகளில் இந்து சங்கம் என்ன இவர்களுக்கு உடந்தையா என்று கேள்வி எழுந்தாக மிகவும் வருத்தப்பட்டார். தலைவரின் வருத்தம் நியாமான ஒன்று . தவறான ஒரு தலைமையில் இயங்கி ஒரு இயக்கத்தை ஒரு தேசிய நீரோடையில் இணைக்கும் ஒரு சிறு முயற்சி தான் துணைத் தலைவர் அந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு பேசி விட்டு வந்திருக்கின்றார். யாருக்கு தெரியும் அந்த சாமியார் பசுத் தோல் போர்த்திய புலி மாறுவர் என்று அவர்களின் சீடர்களின் கதிதான் எப்படி? மதப் போர்வையில் சில சாமியார்களின் மன்மதலீலைகள் அரங்கேற்றம் பெருவதற்கு பாலியல் உறவு கொள்வதற்கும் அவர்களின் வக்கிரமான புத்தி மட்டும் காரணம் அல்ல, நாமும் ஒருவகையில் காரணமாகிவிடுகின்றோம். ஆன்மீகத்தை துறந்துவிட்டு மத சங்குகளில் மக்களின் வாழ்க்கை நெறிகளை புகுத்திவிட்டோம். எது உண்மை எது பொய் என்று பகுத்துணராமல் உணர்ச்சி அடைப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் இவர்களை போன்றோரின் ஆளுமைக்கு அடிமைப்பட்டு தான் போவோம்.

பால் உறவும் ஆன்மீக மேம்பாடும் (sex and spiritual development) என்ற பொருள் குறித்து விளங்கிக் கொள்ளும் முன் அதனுடைய மதிப்பைப் பற்றி நாம் உணர்ந்துக் கொள்ளவேண்டும். இந்த பால் உறவு என்ற ஒன்று, அதை ஒட்டிய அறிவு, எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு சமுதாயத்தில் தெளிவு இருக்கிறதோ, அந்த அளவுக்குக்தான் சமுதாயம் நல்ல முறையில் மகிழ்சியாக, உடல் நலத்தோடும் மனவளத்தோடும் இருக்க முடியும்.
என் நண்பர் ஒரு அருமையான ஒரு விளக்கத்தை தந்தார்.

பிரமாச்சாரியத்தையும் இல்லறத்தையும் இணைக்கும் பாலம் தான் காய கல்ப பயிற்சி. நாத விந்து சக்திகளை குண்டலினியின் சக்தியாக மேல் எழுப்பி அந்த நாத விந்து சக்திகளை உடல் முழுவுதும் பரப்பி இளமையை காப்பது மட்டும் அல்லாமல், மன கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்கும் ஒரு அருமையான வழி இந்த காய கல்பம் என்று . இரண்டு வேவேறான கோப்பாடுகள். அதாவது துறவறமும் இல்லறம் ஒரே செயல் முறையில் இணைக்கும் இந்த இந்திரிய யோகம். மன ஆளுமை அதே சமயம் விந்து நாதத்தை சேமித்து தேவைக்கு மிகுதியானதை உடலுக்கு உயிர்ச் சக்தியாகி உடல் நலத்தையும் மன நலத்தையும் ஒருங்கே பேணும் அற்புத கலை தான் இந்த காய கல்ப பயிற்சி. ஆனால் நமது மக்கள் இந்த மாதிரியான வாழ்க்கைக்கு தேவையான அற்புத பயிற்சியை தவிர்த்து விட்டு வேறு எதுக்கோ கவணத்தை செலுத்துகின்றனர்.

இயற்கையும், அறிவும் இணைந்துதான் வாழ்வு நடைப்பெறுகிறது. இயற்கையை உணர்ந்து, இயற்கையை மதித்து, இயற்கையின் விளைவறிந்து எண்ணம், சொல், செயல் பயன்படுத்தி நல்ல முறையில் செம்மையாக வாழ்வை நடத்துவதற்கு ஏற்ற பயிற்சி தான் யோகம்.
கண்ணை மூடிக் கொண்டால், அது தியானம் அன்று. மனம் ஒருமைப்ட்டு மனதை மற்ற எண்ணத்தில் இருந்து விடுப்பட்டு ஒரே சிந்தனையில் வைத்திருப்பதுதான் தியானம், சிலர் நினைப்பது போன்று காவி உடை அணிந்தால் மட்டும் அவன் யோகியாகிவிடுவானா? யோகம் தியானமும் ஒரு மனிதனை செம்மை படுத்திவிடுமா? அவன் மனவளமும் அகத் திறனும் முழுமை பெற்று மனக்கட்டுபாடுக் கொண்டால் அவன் ஒரு சிறந்த யோகி ஆவான். அது அகத்தை ஆய்ந்துணர்ந்தால் தான் உண்டு.

சரித்திரத்தை புரட்டிப்பாருங்கள். துறவிகள் என்று வெளியேறியவர்களில் பெரும்பாலோர் அறிவின் நிறைவு பெற்றுப் பின்னர் துறவு பெற்றார்களில்லை, அறியாமை, மனகுழப்பம், எழ்மை வேலையின்மை,நோய்,சோம்பேறித்தனம், பேராசை, வெறுப்பு, குடுப்பச் சண்டை இவற்றால் இல்லம் விட்டுக் கடமை பிறழ்ந்து வெளியேறினார்கள், சுழ்நிலை நிர்பந்தத்தால் தவிர்க்கமுடியாத நிலையில் வெளியேறியவர்களும் உண்டு. அவர்களில் ஏதோ ஒரு சிலர் சந்தர்ப வசதியாலும், நல்லாசிரியரோடு தொடர்பு கொண்டு ஞானப் பேறு பெற்றார்கள். மற்றவர்கள் வாழ்வு பாழாகி துன்புற்று மடிந்தார்கள்.

புத்தபிரானும் இறுதியாக ஒரு நல்ல ஒரு பெண்மணியிடம் தீட்சை வாங்கி உண்டுவிட்டே போதிமரத்தில் சித்தியை பெற்றார். உலகிற்கு புத்தத்தை தந்தார். இல்லை என்றால் பத்திலே ஒன்றாகி கரைந்து போயிருப்பார் புத்தர்.

நாம் எதை எதையோ நினைக்கின்றோம். ஆனால் நினைத்தெல்லாம் நடப்பது இல்லை. ஏனெனில் நம் எண்ணங்களுக்கு வலுவில்லை. அந்த வலிமையை “தாரனை” என்னு தியானத்தால் வலுப்பெறச்செய்யலாம். எண்ணம் வலுப்பெரும் போது, நமது சிந்தனை செயல் உறுதிபடுகிறது. நல்ல எண்ணங்களை நினைக்க தெரியாதவராக நாம் இருந்தால் துன்பமே அன்றி இன்பம் இல்லை.

தியானம் பயிலும் முன் நாம் நல்ல சிந்தனைக் கொண்டவராக இருக்க வேண்டும். ஆசை பற்று கடந்தவையாக நமது மனம் இருக்கவேண்டும். அது தான் மனக் கட்டுப்பாடு. நல்ல எண்ணங்களாளே நமது வாழ்க்கையும் வடிமைக்கப்டுகிறது.
மனக் கட்டுப்பாடின்றி நல்ல யோகியை நடிப்பவர்களின் வேசம் ஒரு நாள் உலகிற்கு தெரிய வரும். அது இயற்கையின் நீதி அனைத்து துறந்தவன் யோகியாக இருக்கலாம். ஆனால் இங்கு பலர் உடையயைதான் துறக்கின்றனர். உள்ளத்தை அல்ல. துறவிக்கு எதற்கு பல கோடி சொத்து? வீடு, நிலம், பரிபாலனம்?

உண்ணும் உணவு கூட நம் உழைப்பில் இருந்து பெற வேண்டும். பிச்சை எடுப்பவன் எப்படி யோகியாவன். நாம் வணங்குவதற்கு அவன் எப்படி யோக்கியவன் ஆவான்? இந்த சமுதாயம் பிச்சைக்காரர்களை வளர்கிறது. மதத்தின் பெயரால் யோகியின் பெயரால் சத உட்க்கார்ந்து உண்ணும் சோம்பேறி மனிதனை உருவாகிக் கொண்டிருக்கிறது. நமது சமுதாயத்தில் தான் இலவச அண்ணதானம். அதிலே வேறு உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்ற உறங்கும் சித்தாந்த போதனை. எப்படி உருப்படும் நமது சமுதாயம். ஆனால் மேலை நாடுகளில் No Free lunch .உழைப்பில்லாமல் அங்கு ஊதியம் இல்லை.

ஒரு வேளை உண்பவன் யோகி
இரு வேளை உண்பவன் போகி
மூன்று வேளை உண்பவன் ரோகி

அளவான உறக்கம், அளவான உழைப்பு. அளவான ஒய்வு, இதிலே அளவான உடல் உறவும், அளவான செல்வம் இருந்தால் சிறப்பு. அளவுக்கு மீறிய எதுவும் துன்பம் தர கூடிய ஒன்றுதான். அளவுக்கு மீறிய எந்த ஒரு செல்வமும் மற்றவர்களின் உழைப்பை அவர்களுக்கு சேர வேண்டிய பொருளை நாம் சுரண்டுவது போன்ற செயல்தான். இதுவும் ஒரு வகையான சமுதாய துன்பம் தான்.

இதிலே வேடிக்கை என்னவென்றால் எல்லாம் துறந்த சாமியார்களுக்கு பல கோடி சொத்துக்கள் , கை கால்களை அமுத்தி விட பக்தர்கள். உணர்சிகளை அடக்க முடியாத இந்த சாமியார்கள் பெண்ணின்பத்தில் உணர்சிவசப்படுகின்றனர். இவர்கள் ஆன்மாவை துறந்தவர்கள் அன்று. பேராசைக் கொண்டவர்கள். சில சித்திகளை கொண்டு பணம் பறிபவர்கள். வெட்டகம் கெட்டவர்கள். இவர்கள் எல்லாம் யோகியா? பணம் தேவை இல்லாத ஒருவருக்கு பணம் காசு கொடுக்கும் முட்டாள்கள் நாம். எவ்வளோ நல்ல இயக்கங்கள் வாழ்க்கை நெறியை சொல்லுகிறது. ஆனால் அது எல்லாம் நமது கண்ணுக்கு தெரிவதில்லை. ஆடம்பரமும் , ஆர்ப்பாட்டம்தன் இவர்கள் தெரிகிறது. பணத்தோடு வாழ்பவர்கள் எல்லாம் யோகி அல்ல, பகுத்தறிவோடு வாழ்க்கையை உணர்த்த முற்படுவோர்தான் யோகி.

ஒரு யோகி என்றால் இந்த மக்களின் மன வளத்தையும் உடல் நலத்தையும் அவன் சார்ந்த குடுப்ப நலத்தையும் பேணும் ஒரு அமைப்பாக இருந்து செயல் படவேண்டும் அந்த யோகி. இதுதான் வாழ்க்கை என்று தான் உணர்ந்து, இந்த மக்களும் உணரும் நெறிமுறைகளை தந்து, மக்களின் ஆன்ம நெறிகளை வாழ்க்கை நெறிகளோடு இணைத்து வாழ்பவன் தத்துவர்தமான இந்த வாழ்க்கையை உணரகூடியவனாக இருப்பான்.

No comments: