Thursday, March 10, 2011

சீடனின் உரிமை

சீடனின் உரிமை

குருவே சரணம்


எல்லாம் வல்ல இறை ஒன்றே எப்போதும் நீடித்து நிலைத்து இருக்கிறது. அந்த சுத்தவெளி என்ற நிலைக்கு அனுபவிக்கவென்று, அறிவதற்கு என்று எதுவும் இல்லாது, பூரணமாக நிறைவிலே எப்போதும் இருக்கிறது.

மனிதன் என்பவன் தான் இறை என்ற இயல்பிலே இருந்து நிறைவினை உணராத நிலை தனக்குத் தெரிவதாகக் கருதி, மீண்டும் இறையை நோக்கிச் செல்லும் போது, அந்த சுத்தவெளியில் மனதைவிரித்தும், ஒடுங்கியும் நின்று பார்க்கும் போது, அங்கே அறிவது (அறிவு + அது) என்று த்வைத மனப்பான்மையிலே இறை உணர்வினை உணர்கிறான். அறிவு என்பது தனது என்று மூலம் என்றும், அது என்பதை இறை என்றும் நினைக்கிறான். அறிவது என்பதிலே அறியப்படுவது என்ற சாட்சி நிலையும் அடங்கியே இருக்கிறது. இந்த சாட்சி அறிவும் இறைனிலை தான் என்றாலும், இறையே தான் சாட்சியாக இருந்து அந்த அனுபவத்தை பதிவு செய்கிறது...

முடிவினில், அறிவது என்பதைத் தாண்டி ஒடுங்கும் போது, அறிவது என்று இரண்டு நிலைகள் ஒடுக்கப்படும் போது, அங்கே முனைப்பு ஒடுக்கப்படுவதைக் காணும் போது, சத்தியமான இறைதத்துவம் அவனுள் ஜொலிக்கிறது.


இறையை உடல் என்ற வடிவத்திலே கண்ட மகான்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிலே ராமலிங்க வள்ளலார், ராமகிருஷ்ணர் போன்ற மகான்கள் எல்லாம் மன ஓர்மையினால் இறையோடு பேசினர்..

இருப்பினும் இந்த அனுபவம் எல்லாம் மகான்கள் சாதனையாக சிலரால் போற்றப்பட்டாலும், அதே நிலையிலே இருந்து விடவில்லை. மேற்கொண்டு இறையோடு சுத்தவெளியாகக் கரைந்து நின்றனர். இம்மகான்களின் எழுத்துக்கள் சுத்தவெளியினையே தான் மூலக்கருத்தாக இருக்கிறது. விவேகானந்தர் முதன் முறையாக ராமகிருஷ்ணரைப்பார்த்தபோது, என்ன இது இவர் மன நிலை சரியில்லாதவரா? என்று நினைத்தாராம்.

சீடனைப்பாத்தவுடன், ராமகிருஷ்ணர் அப்படியே அவரை அணைத்து, உனக்காக எவ்வளவு நாளாய் காத்துக்கொண்டிருந்தேன் தெரியுமா? எதற்கு இவ்வளவு தாமதமாக வந்திருக்கிறாய்? என்றெல்லாம் கண்களிலே ஆனந்தக்கண்ணீருடனும், சந்தோசத்திலே துடித்தாராம் குரு. அதெல்லாம், உடல் என்ற எல்லைக்குள் இருந்த சீடனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஒரு முறை சித்திகள் பெறுவது பற்றி குரு கேட்ட போது, விவேகானந்தர் குருவிடம் கேட்டாராம்... இந்த சித்திகளால், எனக்கு முக்தி பெறுவதற்கு உதவுமா? என்று கேட்டபோது, ராமகிருஷ்ணர் முக்திக்கு இந்த சித்திகள் உதவாது என்றவுடன்... அப்படி என்றால் எனக்கு அந்த சித்திகள் வேண்டாம் என்றாராம் விவேகானந்தர்... குருவின் கண்களிலே ஆனந்தக்கண்ணீருடன் பெருமையாகச்சொன்னாராம்... பாருங்கள்.. எனது நரேந்திரனை...


நாம் நமது குருவிற்கு அப்பேர்ப்பட்ட சீடனாக இருப்பது தான் குருவிற்கு உயர்புகழினைத் தர முடியும்.. குருவிற்கு உயர்புகழ் தருவது சீடனின் உரிமை. கடமை. நன்றிக்கடன். அதுவே குரு காணிக்கை.


குரு நம்முடன் இப்போது இல்லை என்ற புலன் வழியால் சொல்லலாம் ஆனால் அதை பகுத்தறிந்து மனதை ஒடுக்கி கிட்டாதவர்களை இந்த பிறப்பிலே ஒருவரையாவது காணவேண்டும்.

சென்னை தலைமை மன்றத்திலே, 1998ம் ஆண்டு, குருவிடம் ஒருவர் ராமகிருஷ்ணர் குருவிடம் கேட்டார்..

சுவாமி.. ராமகிருஷ்ணர் காளியிடம் பேசியது எப்படி சாத்தியமாகும்?

(குருவானவர் பொதுவாக, கவனிக்காத மாதிரியே கேட்பார். ஆனால் உன்னிப்பாக எந்த ஒருவரின் மன அலைகளையும் தடுத்து நிறுத்தி கவனிப்பார்)

அந்த ஹால் முழுவதும் அமைதியாக இருந்தது குருவின் பதிலுக்காக.

குருவானவர் கேள்வியை கேட்டபடியே, அந்த ஹாலில் நுழைந்த ஒரு பெண்மணியை நோக்கி வாழ்த்தினார். என்னம்மா எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் ஆச்சு உங்களைப்பார்த்து... என்றார்.

அந்தப் பெண்மணி... சாமி... நீங்க தான் எங்க வீட்டிற்க்கு தினமும் வர்ரீங்க! நான் உங்களோடு பேசிக்கொண்டே தானே இருக்கிறேன் என்றார்.. சிரித்தார் குரு...

இன்னும் பதில் சொல்லவில்லை அந்தக்கேள்விக்கு... எங்களுக்கு அந்த நிகழ்வே பதில் என்று புரிந்தது... இனிமேல் குருவின் வாய் வார்த்தைகளுக்கு காத்திருக்கவேண்டியதில்லை... அந்த அன்பருக்கு குரு ஏதோ பதில் பேசினார். அதை கவனிக்கவே முடியவில்லை.

குரு அமைத்திருக்கும் தியான முறை என்பது மட்டுமே சிறந்தது என்று மார்தட்டுவதை விட, தியானத்திலே குருவை உணர்வது சிறந்தது. அதுவே குருவிற்குப் பெருமை. எத்தனை கோடி சீடர்க்கும் அங்கே இடமிருக்கிறது...கவனித்துக்கொள்வார் குரு.

புலன்களால் அடையும் ஒன்று/காண்கின்ற என்ற பதிவு என்பது ஒரு எண்ணம் மட்டுமே... அந்த எண்ணத்தை விட்டு தாண்டி விட்டால், அறிவாகவும் இருப்பதைப்பற்றிக்கொள்ளலாம். எந்த மார்க்கத்தினரும் வந்து சேரும் இடம் இது... நேரடியாக நம்மைக்கொண்டு போகிற குருவானவர், எங்கும் அறிவின் தன்மையை விட்டுத் தரமாட்டார்... என்ன செய்தாலும் கூட, அது என்ன பயன் என்றாலும் கூட, அறிவிலே இருந்து விலகும் பேச்சே அவரிடம் இருக்காது. அதே போல குருவானவர், அறிவு நிலையிலே இல்லை என்று எவரும் நிரூபிக்கப்போவதும் இல்லை. தேவை ஏற்படின், அந்த சந்தர்ப்பம் நிர்பந்திப்பின், குருவிற்க்காக எங்கும் விரிவாகப்பேச முன் நிற்போம். அறிவு தனித்தே இருக்கிறது... அங்கே துளியும் நடுக்கம் என்ற இரண்டாவது அனுபவத்திற்கு இடமில்லை.


குருவின் சமாதி நிலை தன்மைக்கு கேள்விக்குறியாக்கப்படின், பொறுமையைத் தகர்த்து அறிவென்ற நிலையோடு நிற்போம்... இந்த உடலைக்காப்பது பற்றி முடிவெடுப்பது குருவே..

இப்போது இறப்பினும் கூட, குருவின் பெருமையைக்கொண்டு செல்லும் நிலையிலே இருந்து ஓயப்போவத்தில்லை. குருவிற்குப் பெருமையைத்தரும் பேச்சை நிறுத்தப்போவதுமில்லை. இதைச்செய்வதனால் முக்தி கிடைக்காதென்று எண்ணுவோர் இருப்பின், அவர்களுக்கு சொல்வதெல்லாம், எனக்கு அந்த மாதிரி குருவைத் தவிர்த்த முக்தி எதுவும் வெண்டாம்.. என்பதே.

நன்றி : சுந்தரராஜன்

No comments: