Saturday, March 26, 2011

நோயே, என்னை நெருங்காதே!

நோயே, என்னை நெருங்காதே!
அசத்துகிறது ஜீன்ஸ்
டி.என்.ஏ. என்பதுதான் 21-ம் நூற்றாண்டில் பல ஆச்சர்யங்களை நிகழ்த்த இருக்கும் அற்புதம். நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் கிட்டத்தட்ட 30 ஆயிரம் ஜீன் மரபணுக்கள் உள்ளன. உயிர் வளர்ச்சிக்கான மரபுக் கட்டளைகளை இந்த டி.என்.ஏ. தனக்குள் கொண்டுள்ளது. பெற்றோர் வழியாக, பாரம்பரியப் பண்புகள் சந்ததியினருக்குத் தொடர்ந்து வருவதற்கு இந்த டி.என்.ஏ-தான் காரணம்!

எதிர்காலத்தில் மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு வியாதிகளைத் தடுக்க, இந்த டி.என்.ஏ. தொழில்நுட்பம் பெருமளவு உதவியாக இருக்கும்.


ஜெனிடிக் மருத்துவம் பற்றிய சர்வதேசக் கருத்தரங்கம் சென்னை அருகே உள்ள செட்டிநாடு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
செட்டிநாடு பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் பிரிவு இயக்குநர் டாக்டர் பிச்சப்பன் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக் கழக டாக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசுகையில், ''உடலில் மரபணு மாற்றம் காரணமாகப் பல்வேறு நோய்கள் வருகின்றன. மரபணு மாற்றம் ஏற்படுவதை மியூட்டேஷன் என்று கூறுவோம். உதாரணத்துக்கு, உடலில் இன்சுலின் (சர்க்கரை) உற்பத்தி செய்யும் ஜீனில் மரபணு மாற்றம் ஏற்பட்டது என்றால், இன்சுலின் சுரக்காமல் போய்விடும். சிலருக்கு 40 வயது வரை இன்சுலின் சுரக்கும், திடீரென்று நின்றுவிடும்.
நீரிழிவு நோயைப் பொறுத்த வரை தற்போது ரத்தத்தில் பரிசோதனை செய்யப்படுகிறதே தவிர, ஜீன் வரை சென்று ஆராய்வது இல்லை. அதாவது அந்த நோயின் மூலத்தை ஆராய்வது இல்லை. நமது உடலில் ஆஞ்சியோடென்சைன் கன்வர்ட்டிங் என்ஸைம் (சுருக்கமாக ஏஸ் ஜீன்) என்று ஒரு ஜீன் உள்ளது. இந்த ஜீன், ஆஞ்ஜியோ டென்சைன் 1-ஐ ஆஞ்ஜியோ டென்சைன் 2-ஆக மாற்றிவிடுகிறது.
பொதுவாக, நீரிழிவு உள்ளவர்களுக்கு கண் மற்றும் இதயத்தில் பிரச்னைகள் ஏற்படுவது உண்டு. இந்த ஏஸ் ஜீன் என்பது நம் உடலில் ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருக்கிறது. அந்த குறிப்பிட்ட ஜீனில் மாற்றம் ஏற்படும்போது, ரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. அதனால், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்த ஏஸ் ஜீனில் ஐடி, ஐஐ, டிடி என்று மூன்று வகைகளைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐடி அல்லது டிடி ஜீன் ஒருவருக்கு அதிகமாக இருந்தால், அவருக்கு இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வர வாய்ப்பு அதிகம். இவர்களுக்கு 30 முதல் 40 வயது வரை பெரும்பாலும் பிரச்னைகள் இருக்காது, ஆனால், அதற்குப் பிறகு நிச்சயமாக கண், இதயப் பிரச்னைக்கு ஆளாவார்கள். ஐஐ பிரிவில் உள்ளவர்களுக்கு பிரச்னை குறைவாகத்தான் வரும்.
இதைக் கண்டுபிடிப்பதற்கு ஒருவரின் ரத்தத்தில் இருந்து டி.என்.ஏ-வை தனியாகப் பிரித்து எடுப்போம். பி.சி.ஆர் தெர்மல் சைக்ளர் என்னும் உபகரணத்தைப் பயன்படுத்தி என்ன வகையான 'ஜீனோ டைப்’ இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்போம். இந்தக் கருவி ஒரே ஒரு ஜீனை பல லட்சங்களாகப் பெருக்கிக்காட்டும். இதை சில மணி நேரங்களில் செய்து முடித்து, ரிசல்ட்டைக் கையில் கொடுத்துவிடுவோம். ஏஸ் ஐடி, டிடி... இருந்தால் என்ன மாதிரியான நோய் தாக்குதல் ஏற்படலாம், அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தலாம். இதை அவர்கள் முறையாகப் பின்பற்றினால், எதிர்காலத்தில் குறிப்பிட்ட நோய்கள் வராமல் தடுத்துக்கொள்ள முடியும். இந்த பரிசோதனையை யார் வேண்டுமானாலும், எந்த வயதிலும் பார்த்துக்கொள்ளலாம்.
தற்போது குழந்தை பிறக்கும் முன்பே அதாவது கருவில் இருக்கும்போதே ஏதேனும் பிறவிக் குறைபாடு உள்ளதா என்பதைக் கண்டறிதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும் புற்றுநோய், இதய செயல் இழப்பு, நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் எதிர்காலத்தில் வருமா என்பதைக் கண்டறியும் வசதியும் வந்துவிட்டது. அயல் நாடுகளில் இது பெருமளவில் பயன்பாட்டுக்கு வந்தாலும், இந்தியாவில் சில இடங்களில்தான் இந்த ஆய்வுகள் நடைபெறுகின்றன. எதிர்காலத்தில், டி.என்.ஏ. தொழில்நுட்பத்தை வைத்து பரிசோதனை செய்வதன் மூலம் மரபணு வியாதிகளின் தாக்கத்தைக் குறைக்கவும், தடுக்கவும் முடியும்.
மருத்துவ சமுதாயத்தினர் மத்தியில் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதன் மூலமும், டி.என்.ஏ. டெஸ்ட் செய்யும் வசதியை அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமைப்படுத்துவதன் மூலமும், ஒருவருக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய நோய்களை முன்கூட்டியே கண்டறிய முடியும். இதன் மூலம் சிகிச்சைக்கான கால அளவு, செலவு மற்றும் வலி குறைந்துவிடும். மனிதர்களின் வாழ்க்கைத் தரம் எதிர்பாராத அளவுக்கு உயரும்!'' என்றனர்.
- பா.பிரவீன்குமார்

No comments: